அமித் ஷா மீது பாய்ந்தது வழக்கு.. ரோடு ஷோவில் தேர்தல் விதிமீறல் புகாரில் தெலுங்கானா போலீசார் அதிரடி!
ஹைதராபாத்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது தெலுங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. 2 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளுக்கும் வரும் மே 13 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

தெலுங்கானாவில் காங்கிரஸ், பாஜக, பிஆர்எஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பாஜக சார்பில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் தெலுங்கானாவில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மே 1ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோவில் பங்கேற்றார். அமித் ஷா நடத்திய வாகன பேரணியின் போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும், குழந்தைகளை பங்கெடுக்க வைத்ததாகவும் அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் புகார் அளித்தது.
குழந்தைகள் சிலர் பாஜகவின் தாமரை சின்னத்துடன் கூடிய பிரச்சார பதாகைகள், காவி நிற பலூன்கள் ஆகியவற்றுடன் அமித் ஷாவின் ரோடு ஷோவில் கலந்து கொண்டதாக காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தெலுங்கானா பாஜக தலைவர் கிஷன் ரெட்டி உள்ளிட்ட 5 பேர் மீது தெலுங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications