"இந்திய சட்ட அமைப்பு உடனடியாக.. சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.." தலைமை நீதிபதி கவாய் கருத்து
ஹைதராபாத்: தெலுங்கானாவில் சட்டப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தலைமை நீதிபதி கவாய், நமது நாட்டில் சட்ட அமைப்புகளில் உள்ள சிக்கல்களைச் சுட்டிக்காட்டினார். வழக்கு விசாரணைகள் பல ஆண்டுகள் தாமதம் ஆவது பிரச்சினையாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நமது சட்ட அமைப்பு உடனடியாகச் சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
நமது நாட்டின் 52ஆவது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருப்பவர் பி.ஆர்.கவாய்.. இன்றைய தினம் ஹைதராபாத்தில் உள்ள ஜஸ்டிஸ் சிட்டியில் உள்ள நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பி.ஆர்.கவாய் கலந்து கொண்டார். அப்போது பேசிய கவாய் சில முக்கிய கருத்துகளை மாணவர்களுக்குத் தெரிவித்தார்.

தலைமை நீதிபதி கவாய்
வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் உதவித்தொகை பெற்றுப் படிக்கலாம் எனக் குறிப்பிட்ட அவர், வெளிநாட்டிற்குப் படிக்க சென்று குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைக் கூட்ட வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். மேலும், இந்தியச் சட்ட அமைப்பு தனித்துவமான சவால்களை எதிர்கொண்டுள்ளது என்றும், அதனைச் சரிசெய்ய வேண்டிய தேவை உள்ளது என்றும் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்தார்.
உடனடியாகச் சரி செய்ய வேண்டும்
தலைமை நீதிபதி கவாய் மேலும் கூறுகையில், "நமது சட்ட அமைப்பு உடனடியாகச் சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதேநேரம் நமது மக்கள் சவால்களைச் சமாளிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தியாவின் சட்ட மரபுகளைக் கொண்டாடுவது மட்டும் போதாது. அதன் எதிர்காலம் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். ஆராய்ச்சியாளர்கள், இளம் பேராசிரியர்கள் மற்றும் வழக்கறிஞர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதைப் பொறுத்த நமது சட்ட மரபுகளின் எதிர்காலம் இருக்கிறது. கல்வி நிறுவனங்களில் மட்டுமின்றி உதவித்தொகை, சிறந்த சூழல் எனப் பல விஷயங்களில் நாம் முதலீடு செய்ய வேண்டும்.
பல்வேறு சவால்கள்
நமது நாடும், இங்குள்ள சட்ட அமைப்பும் தனித்துவமான சவால்களைச் சந்தித்து வருகின்றன. நீதிமன்ற விசாரணைகள் தாமதம் ஆகின்றன. சில சமயம் பல வருடங்கள் கூட தாமதம் ஆகிறது. விசாரணைக் கைதியாகப் பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர்கள் பின் நிரபராதி என விடுவிக்கப்பட்ட சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம். இந்தப் பிரச்சனைகளைச் சமாளிக்க நம்முடைய திறமைகள் உதவ வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், பட்டம் பெறும் பட்டதாரிகள், ஒருவரை பவருக்காக மட்டும் வழிகாட்டிகளாகத் தேர்வு செய்யக்கூடாது என்றும் நேர்மையாக இருப்பவரையே வழிகாட்டியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி நீதிபதி சுஜோய் பால் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்றமே உயர்ந்தது
முன்னதாக கடந்த மாதம் மகாராஷ்டிராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கவாய் நாடாளுமன்றத்தை விட அரசியலமைப்பே சிறந்தது என்று கூறியிருந்தார். அப்போது அவர் பேசுகையில், "சிலர் நாடாளுமன்றம் தான் உயர்ந்தது என்று பலர் கூறினாலும் என்னைப் பொறுத்தவரை அரசியலமைப்புச் சட்டமே உயர்ந்தது.. அரசியலமைப்பின் கீழ் தான் ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் செயல்படுகின்றன" என்று அவர் கூறியிருந்து குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications