மைதானத்தில் தொழுகை நடத்த கூடாதாம்.. பாகிஸ்தான் வீரர் ரிஸ்வானுக்கு எதிராக ஐசிசியில் புகார்
ஐதராபாத்: நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மைதானத்திலேயே பிரார்த்தனை செய்ததாக கூறி பாகிஸ்தான் அணியின் வீரர் முஹம்மது ரிஸ்வான் மீது ஐசிசியில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 10 அணிகள் விளையாடி வருகின்றன. லீக் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அதையும் தாண்டி அரசியல், மதம் சார்ந்த சர்ச்சைகள் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாகிஸ்தான் வீரர் முஹம்மது ரிஸ்வான் 49 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியபோது அகமதாபாத் ரசிகர்கள் அவரை நோக்கி ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் முஹம்மது ரிஸ்வான் மீது ஐசிசியில் புகார் அளித்து இருக்கிறார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டால். பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிக்களுக்கு இடையே கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி ஐதராபாத் ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் லீக் போட்டி நடைபெற்றது.
அதில் 68 ரன்கள் எடுத்த முஹம்மது ரிஸ்வான் வழக்கம்போல் கீழே குணிந்து நெற்றியை தரையில் வைத்து இறைவனுக்கு நன்றி செலுத்தினார். இதனை சுட்டிக்காட்டி ஐசிசிக்கு புகார் கடிதம் எழுதி உள்ளார் வினீத் ஜிண்டால். போட்டியின் குறுக்கே பிரார்த்தனைகளில் ரிஸ்வான் ஈடுபடுவது போட்டியின் ஆன்மா குறித்த கேள்விகளை எழுப்புவதாக அவர் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டு உள்ளார். அவர் எழுதி இருக்கும் கடிதத்தில், "இது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முஹம்மது ரிஸ்வானுக்கு எதிரான புகார்.
அவர் நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஐதராபாத்தில் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் குறுக்கே கிரிக்கெட் மைதானத்திலேயே தொழுது உள்ளார். கிரிக்கெட் மைதானத்தில் முஹம்மது ரிஸ்வான் பல இந்தியர்களுக்கு மத்தியில் பிரார்த்திக்கும் அவரது செயல் தன்னுடைய மதத்தை வேண்டுமென்றே வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இருக்கிறது. இது விளையாட்டின் ஆன்மாவுக்கு எதிராக உள்ளது.
ரிஸ்வானின் இந்த செயல் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது. அவரது கொள்கை குறித்து கேள்விகள் வருகின்றன. தான் முஸ்லிம் என்பதை காட்டிக்கொள்வதற்காகவே ரிஸ்வான் விளையாடும்போது தொழுகையில் ஈடுபடுகிறார். இடைவேளை சமயங்களில் தன்னுடைய அணி வீரர்களுடன் ரிஸ்வான் இதுபோல் பிரார்த்தனைகளில் ஈடுபடுகிறார்.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றவுடன் இதனை காசாவில் வாழும் மக்களுக்காக சமர்பிக்கிறேன் என ரிஸ்வான் தெரிவித்து உள்ளார். இது அவரது மத மற்றும் அரசியல் கொள்கையை காட்டுகிறது." என்று தன்னுடைய புகாரில் அவர் தெரிவித்து உள்ளார். உலகக்கோப்பை தொடரில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி இருக்கும் பாகிஸ்தான் அணி இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகளிடம் வெற்றிபெற்று உள்ளது. இந்தியாவிடம் தோல்விடைந்து உள்ளது. அந்த அணி அடுத்ததாக சென்னையில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது.












Click it and Unblock the Notifications