ஹைதராபாத் டூ ம.பி.- 800 கி.மீ. நடைபயணமாக கிளம்பிய 50 தொழிலாளர்கள்- முகாமுக்கு அனுப்பி வைப்பு
ஹைதராபாத் : நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட லாக்டவுனையடுத்து ஹைதராபாத்தில் இருந்து மத்திய பிரதேச மாநிலத்துக்கு 800 கி.மீ. தொலைவு நடந்து செல்ல முயன்ற 50 தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Recommended Video
கொரோனாவை கட்டுப்படுத்த லாக்டவுன் அமலாக்கப்பட்டதால் அன்றாட கூலி தொழிலாளர்கள் அடுத்த நாள் வாழ்க்கை மீது நம்பிக்கையை இழந்தனர். இதனால் பெருநகரங்களில் இருந்து தங்களது சொந்த குக்கிராமங்களை நோக்கி புறப்படவும் அவர்கள் தயாரானார்கள்.

தொழிலாளர்கள் நடைபயணம்
ஆனால் பேருந்து, ரயில் என பொதுப் போக்குவரத்துக்கு எதுவுமே இல்லை என்பதால் இந்த தொழிலாளர்கள் முடங்கிப் போய்விடவில்லை. 1,000 கி.மீ தொலைவில் தங்களது கிராமம் இருந்தாலும் பரவாயில்லை.. என மூட்டை முடிச்சுகளுடன் குழந்தைகளுடன் நடைபயணத்தை துணிச்சலுடன் தொடங்கினர் இந்த தொழிலாளர்கள். கொரோனா பரவி வரும் நிலையில் இது மிகவும் பேரச்சத்தை ஏற்படுத்தியது.

நாடே அதிர்ச்சியில்
தலைநகர் டெல்லியில் இருந்து இப்படி லட்சத்துக்கும் அதிகமானோர் ஒரே நேரத்தில் வெளியேறிய சம்பவத்தால் நாடே திகிலடித்துப் போய் கிடக்கிறது. டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், பீகார் என வட இந்திய மாநிலங்களுக்கு நடைபயணமாக இவர்கள் பயணித்து வருகின்றனர். இன்னமும் சிலர் 1,000 கி.மீ தொலைவில் உள்ள ஜார்க்கண்ட்டுக்கும் கூட நடந்தனர். இப்போதும் வட இந்திய மாநிலங்களின் நெடுஞ்சாலைகளில் இந்த தொழிலாளர்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஹைதராபாத் டூ ம.பி
இதேபோல ஹைதராபாத் உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களில் இருந்தும் வட இந்தியாவுக்கு நடந்தே செல்லவும் தொழிலாளர்கள் புறப்பட்டனர். அப்படி ஹைதராபாத்தில் இருந்து 800 கி.மீ. தொலைவில் உள்ள மத்திய பிரதேசத்துக்கு 50 பேர் கொண்ட தொழிலாளர்கள் குழு நடைபயணத்தை தொடங்கியது. நெடுஞ்சாலைகளின் வழியே பயணத்தில் 3,4 நாட்களில் எப்படியும் சொந்த கிராமத்துக்கு சென்றுவிடலாம்; அங்கே போய் எப்படியும் பிழைத்து கொள்ளலாம் என உயிரை கையில் பிடித்துக் கொண்ட இந்த 50 பேர் கொண்ட குழு புறப்பட்டு சுமார் 80 கி.மீ. நடந்தும் விட்டது.

முகாம்களில் சேர்ப்பு
ஆனால் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் இவர்களை அடையாளம் கண்டு தடுத்து நிறுத்தினர். இவர்கள் அனைவருக்கும் தங்கும் இடமும் உணவும் ஏற்பாடு செய்து தருகிறோம் என உறுதியளித்த போதும் அதை ஏற்கும் மனநிலையிலும் அவர்கள் இல்லை. ஆகையால் நடைபயணத்தை தொடருவதில் மும்முரமாகவே இருந்தனர். பின்னர் போலீசார் தலையிட்டு அனைவரையும் தற்போது நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications