பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி.. 375 பேருக்கு செலுத்தி டிரையல் ஆரம்பம்.. பக்க விளைவுகள் இல்லை
ஹைதராபாத்: கொரோனா வைரசுக்கு எதிராக ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி, 375 பேரின் உடலில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதில், எந்த பக்கவிளைவுகளும் யாருக்கும் ஏற்படவில்லையாம்.
Recommended Video
ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து கொரோனா வைரஸை முறியடிக்கும், கோவாக்ஸின் என்ற பெயரிலான தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிராக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து என்று இதற்கு பெயர் கிடைத்துள்ளது.

தொடங்கிய பரிசோதனை
இந்த மருந்து கோவாக்சினை மனித உடலில் செலுத்தும் சோதனைகள் ஜூலை 15 ஆம் தேதி தொடங்கியதாக பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 12 மருத்துவமனைகளில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மருத்துவமனைகள்
தடுப்பூசி சோதனைகள் தொடங்கியுள்ள மருத்துவமனைகள்: அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) டெல்லி, எய்ம்ஸ் பாட்னா, விசாகப்பட்டினத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனை, ரோதக்கில் உள்ள முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம் (பிஜிஐஎம்எஸ்), பெல்காமில் உள்ள ஜீவன் ரேகா மருத்துவமனை, கில்லூர்கர் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியவை அடங்கும். நாக்பூரில், கோரக்பூரில் உள்ள ராணா மருத்துவமனை, சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனை, ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் மருத்துவ அறிவியல் நிறுவனம், புவனேஸ்வரில் கலிங்கா மருத்துவமனை, கான்பூரில் உள்ள பிரகார் மருத்துவமனை மற்றும் கோவாவில் ஒரு மருத்துவமனை.

பக்க விளைவுகள்
தடுப்பூசி யாருக்கு வழங்கப்பட்டது என்பது தன்னார்வலர்களுக்கோ அல்லது ஆராய்ச்சியாளருக்கோ தெரியாது. சோதனைக் காலம் முடிந்த பின்னரே தடுப்பூசி யாருக்கு செலுத்தப்பட்டது என்பதை அவர்கள் அறிவார்கள். சோதனையின் முதல் கட்டத்தின்போது, தடுப்பூசி போடப்பட்டவர்கள் தங்கள் உடலில் ஏதேனும் பக்க விளைவு உருவாகுகிறதா என்பதை ஆய்வாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதுவரை அப்படி எதுவும் பக்க விளைவு ஏற்படவில்லை.

ஹரியானாவில் 3 பேர்
ஹரியானா மாநில சுகாதாரத்துறை, அறிவியல் மற்றும் உள்துறை அமைச்சர் அனில் விஜ் இதுபற்றி கூறுகையில், கோவாக்ஸின் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் பணி ஹரியானாவின் ரோத்தக் நகரில் உள்ள பிஜிஐ நிறுவனத்தில் நடந்து வருகிறது.
3 தன்னார்வலர்களுக்கு முதல்கட்டமாக மருந்து உடலில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டதில், அவர்களுக்கு எந்த பக்கவிளைவும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

6 மாதங்கள்
இந்த பரிசோதனை இப்போதைக்கு முடியாது. தொடர்ந்து 6 மாதங்கள் நடக்கும். முதல் 3 மாதங்கள் கோவாக்ஸின் தடுப்பு மருந்தின் தன்மை குறித்தும், உடலில் எவ்வாறு நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்குகிறது குறித்தும் ஆய்வு நடக்குமாம். பக்க விளைவுகள் ஏற்படுகிறதா என்பது பற்றியும் ஆய்வு செய்யப்படும்.












Click it and Unblock the Notifications