கச்சிகுடாவில் தனியாக நின்ற கார்.. வெடிபொருட்கள் இருக்கு.. பொதுமக்கள் கொடுத்த தகவல்! பரபரப்பான போலீஸ்
ஐதராபாத்: டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், கச்சிகுடா பகுதியில் உள்ள நிம்போலி அட்டா ரயில்வே மேம்பாலம் கீழ் தனியாக கார் ஒன்று நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டிருந்தது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த காரில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில், உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நவம்பர் 10ஆம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலையம் அருகே மாலை திடீரென ஹூண்டாய் கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சாந்தினி சவுக் சந்தை உட்பட முக்கிய பகுதிகள் அமைந்துள்ள பகுதியில் கார் குண்டுவெடிப்பு நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையம் என்று அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தெலங்கானா மாநிலம் கச்சிகுடா பகுதியில் கார் ஒன்று நீண்ட நேரம் தனியாக நின்று கொண்டிருந்ததால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கச்சிகுடா பகுதியில் உள்ள நிம்போலி அட்டா ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் கார் ஒன்றை அடையாளம் தெரியாத நபர் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாக கார் சாலையை மறித்து நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் பீதியில் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதன்பின் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த கார் நிற்கும் பகுதிக்கு யாரையும் அனுமதிக்கவில்லை. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் காருக்குள் எந்தவித சந்தேகத்திடமான வெடி பொருட்களும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான நின்று கொண்டிருந்த கார் எண்: TS 11 UA 7868 என்று தெரிந்துள்ளது. அந்த கார் ஃபெரோஸ் கான் என்பவரின் பெயரில் பதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இதன்பின் தற்போதைய காரின் உரிமையாளார் யார் என்பதையும் போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அப்போது காரின் உரிமையாளர் பாலாஜி ரகுநாத் என்று தெரிய வந்திருக்கிறது.
அவர் காரினை வாங்கிய பின் ரிஜிஸ்டர் எண்ணை அப்டேட் செய்யவில்லை என்று தெரிந்திருக்கிறது. இதன்பின் அந்த காரினை வாடகைக்கு கொடுத்ததாகவும், யாருக்கு வாடகைக்கு கொடுத்தேன் என்பது தெரியாது என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். தற்போது அந்த காரினை வாடகை எடுத்த நபர் குறித்து போலீசார் தேடி வருகின்றனர். டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்திலும் ஹூண்டாய் ஐ20 கார் பல்வேறு நபர்களின் கைகளுக்கு மாறி பயங்கரவாதிகள் கைகளுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications