யூடியூபர்களுக்கு இடையே நடந்த சண்டை? விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தீ விபத்துக்கான காரணம்? ஷாக் தகவல்
ஐதராபாத்: விசாகப்பட்டினத்தில் துறைமுகத்திற்கு சொந்தமான மீன்பிடி துறைமுகத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 25 படகுகள் எரிந்து சாம்பலாகின. ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த தீ விபத்துக்கு யூடியூபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் யூடியூபர்களுக்கு இடையே நடைபெற்ற சண்டைதான் காரணமாக இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறிய தகவலை பார்க்கலாம். விசாகப்பட்டினம் துறைமுக ஆணையத்தை அடுத்துள்ள மீன்பிடி துறைமுகத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 25 படகுகள் சாம்பலாகின.

அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் ரூ.15 கோடி மதிப்பு மிக்க படகுகள் முற்றிலும் எரிந்து நாசம் ஆகின. படகில் இருந்த டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்கள் ஆகியவையும் இருந்ததால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்து அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்த தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து: இந்த விபத்து குறித்து விசாகப்பட்டிம் மண்டல தீயணைப்புத் துறை அதிகாரி நிரஞ்சன் ரெட்டி கூறியதாவது:- நள்ளிரவு 12.30 மணிக்கு தீ விபத்து குறித்து எங்களுக்கு அழைப்பு வந்தது. அதிகாலை 4.30 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அணைக்கப்பட்டது. மொத்தம் 14 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன" என்றார்.
இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இதற்கிடையே, இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கு நள்ளிரவு அங்கு வீடியோ எடுக்க வந்த யூடியூபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தான் காரணமாக இருக்கும் என்று காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. மீன்பிடித்தல் தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து பிரபலமாக இருக்கும் அந்த இளைஞருக்கு போட்டியாக இருக்கும் நபர்களால்தான் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கக் கூடும் என கருதப்படுகிறது.
போலீஸ் விசாரணை: பண விவகாரம் தொடர்பாக அந்த இளம் யூடியூபருக்கும் சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த இளைஞருக்கு எதிரான நபர்கள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த படகிற்கு தீ வைத்து இருக்க சாத்தியம் உள்ளது. இதனால், அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications