கோவிலுக்குள் புகுந்த திடீர் வெள்ளம்.. கழுத்தளவு நீரில் நீந்தியபடி வெளியேறிய அர்ச்சகர்கள்!
ஹைதராபாத்: கோவிலுக்குள் புகுந்த திடீர் வெள்ளத்தால் அர்ச்சகர்கள் கழுத்தளவு நீரில் நீந்தியப்படி வெளியேறியுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மட்டப்பள்ளியில் பழமை வாய்ந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சாமி கோவில் உள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் கிருஷ்ணா நதி தண்ணீர் புகுந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தெலுங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. தென் மேற்கு பருவமழையின் தீவிரத்தால் கனமழை கொட்டி வருகிறது.

அதிகரித்த தண்ணீர்
இதன் காரணமாக கிருஷ்ணா நதியில் தண்ணீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் இன்று கிருஷ்ணா நதியில் ஓடும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரித்தது.

லட்சுமி நரசிம்ம சாமி
இதனால் நதி ஓரத்தில் உள்ள கிராமங்கள், வயல்கள் ஆகியவற்றில் தண்ணீர் புகுந்தது. அதேபோல் தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மட்டப்பள்ளியில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சாமி கோவிலுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.

கருவறை பூட்டல்
கருவறை வரை சென்றது வெள்ளம். திடீரென கழுத்தளவு வரை தண்ணீர் புகுந்ததால் அதிர்ச்சியடைந்த அர்ச்சகர்கள் அவசரஅவசரமாக கருவறையை இழுத்து பூட்டினர்.

வைரலாகும் வீடியோ
பின்னர் கழுத்தளவு தண்ணீரில் நீந்தி அர்ச்சகர்கள் வெளியேறினர். கோவிலுக்குள் வெள்ளம் புகுந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications