பூஜையறை டூ படுக்கையறை.. கட்டு கட்டாக லஞ்ச பணம்.. மனைவியை சிக்கவிட்ட கணவன்
ஹைதராபாத்: கணவன், மனைவிக்கு பல விவகாரங்களில் கருத்து வேறுபாடு வரும். தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் ஒரு கணவன், மனைவி இடையே லஞ்சம் வாங்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மனைவி லஞ்சம் வாங்கியதை, கணவரே வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசுத்துறைகளில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் இருக்கத்தான் செய்கின்றனர். லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்று நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகள் மிகவும் குறைவு. அப்படி லஞ்சம் வாங்கும் அதிகாரி சிக்குவது குறித்து நிறைய செய்திகள் பார்த்திருப்போம். பொதுவாக லஞ்ச அதிகாரி குறித்து பொது மக்களோ, உடன் பணியாற்றுபவர்களோ தான் புகார் கொடுப்பார்கள். அவர்களின் புகார் அடிப்படையில் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை கையும், களவுமாக பிடிக்கும்.

இந்தியன் படத்தில் மகன் லஞ்சம் வாங்குவதே, தந்தை கண்டித்து ஆக்சனில் இறங்குவது குறித்து பார்த்துள்ளோம். அப்படி குடும்ப உறவுகளே லஞ்சத்துக்கு எதிராக இருப்பது மிகவும் அரிதான சம்பவம். அப்படி ஒரு அரிதான சம்பவம் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத், மணிகொணடா நகராட்சியில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் திவ்ய ஜோதி. திவ்ய ஜோதி மீது அவரின் கணவர் சுவர்ன ஶ்ரீபட் ஊழல் புகார் வைத்துள்ளார். இதை அவர் வெளியில் கொண்டுவந்த விதம் தான் ஹைலைட். திவ்ய ஜோதி லஞ்சம் வாங்கி, அதை தன் வீட்டின் பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைத்தள்ளார்.
பிரபலங்கள் ஹோம் டூர் விலாக் வீடியோ பார்த்திருப்போம். அதுபோல சுவர்ன ஶ்ரீபட், தங்கள் வீட்டில் மனைவி எங்கெல்லாம் லஞ்ச பணத்தை பதுக்கி வைத்துள்ளார் என்பதை வீடியோவாக எடுத்து, அதை சமூகவலைதளங்களிலும் பதிவு செய்துள்ளார். வீடு முழுவதும் கட்டு கட்டாக பணம் இருந்த அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. கணவரே, மனைவியின் தவறுகளை அம்பலப்படுத்திவிட்டார் என்று இந்த செய்தி குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில் சுவர்ன ஶ்ரீபட், தன் மனைவி திவ்ய ஜோதி மீது பல்வேறு புகார்களை முன்வைத்துள்ளார். அதில், என் மனைவி திவ்ய ஜோதி தினமும் லஞ்சம் வாங்குவார். கான்ட்ராக்டர்கள், பில்டர்ஸ்களிடம் அப்ரூவலுக்காக நிறைய லஞ்சம் வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். லஞ்ச பணத்தில் அவர் வீடு கட்டியுள்ளார். வீட்டில் மட்டுமே லஞ்ச பணம் ரூ. 20-30 லட்சம் பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. லஞ்சம் வாங்க வேண்டாம். கமிஷன் கேட்பதை நிறுத்து என பலமுறை அறிவுரை சொல்லியும் அவர் கேட்கவில்லை.
தொடர்ந்து லஞ்சம் வாங்கிக் கொண்டுதான் இருந்தார். திவ்ய ஜோதியின் சகோதரர் சரத்குமார் என்பவர் தான் இதன் பின்னணியில் மூளையாக செயல்பட்டுள்ளார். அவர் தான் திவ்யாவுக்கு லஞ்சம் வாங்க அழுத்தம் கொடுத்து, வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்தார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும என்று கூறினார்.
வீட்டு பூஜையறை தொடங்கி படுக்கையறை வரை கட்டு கட்டாக லஞ்ச பணம் இருந்தது. இந்த விவகாரம் வெளியில் வந்ததும் திவ்ய ஜோதியை ஹைதராபாத் மாநகராட்சிக்கு பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் சுவர்ன ஶ்ரீபட் தன் மனைவியை விவாகரத்து செய்யவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications