தாய்மை உணர்வு.. அனாதையாக விடப்பட்ட கைக்குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண்போலீஸ்.. பாராட்டு குவிகிறது
ஐதராபாத் : தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் நகரில் அரசு மருத்துவமனை அருகே அனாதையாக விடப்பட்ட கைக்குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண்போலீஸ்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அப்சல்கஞ்ச் பகுதியில் மிகவும் பழமையான ஒஸ்மானியா அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை ) மருத்துவமனையின் முன்பு நின்றிருந்த இர்பான் என்ற இளைஞரிடம் அவ்வழியாக வந்த பெண் குழந்தையை கொடுத்து விட்டு, சிறிது நேரத்தில் வந்து விடுவதாக சென்றுள்ளார். குழந்தையை விட்டுச் சென்ற பெண் குடிப்போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
நீண்ட நேரமாகியும் அந்த பெண் வராததால், இரண்டுமாத பெண் குழந்தை பசியால் அழ ஆரம்பித்தது. இதனையடுத்து, அருகில் இருந்த வீட்டில் புட்டிப்பால் எடுத்து வந்து குழந்தைக்கு கொடுக்கப்பட்டது. ஆனாலும், குழந்தையின் அழுகை நிற்கவில்லை.

காவலர் மனைவி வந்தார்
இந்தநிலையில், அப்சல்கஞ்ச் காவல் நிலையத்துக்கு குழந்தையை இர்பான் கொண்டுச் சென்று நடந்ததை கூறினார். பசியால் கதறிதுடித்த குழந்தை சோர்வாக காணப்பட்டது. அப்போது பணியில் இருந்த தலைமை காவலர் ரவீந்திரன், மகப்பேறு விடுமுறையில் உள்ள தனது மனைவி பிரியங்காவிற்கு போன் செய்துள்ளார்.

காவல்நிலையத்தில் கலகலப்பு
பேகம்பேட் காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலராக பணியாற்றும் பிரியங்கா, உடனடியாக வாடகை கார் பிடித்து காவல்நிலையம் வந்து குழந்தையின் பசியை தீர்த்தார். குழந்தை சிறிது நேரத்தில் சிரிக்க தொடங்கியது. காவல்நிலையமே கலகலப்பானது.

போலீஸ் கமிஷனர் பாராட்டு
இதுகுறித்து, தகவல் அறிந்த ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர் அஞ்சானி குமார், தலைமை காவலர் ரவீந்திரனின் கடமை உணர்வையும், பெண் போலீஸ் பிரியங்காவின் தாய்மை உணர்வையும் மனதார பாராட்டினார்.

குழந்தை ஒப்படைப்பு
இந்த நெகிழ்ச்சி சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனைத்தொடர்ந்து, தக்க நேரத்தில் வந்து தாய்மை உணர்வை காட்டிய பெண் போலீஸ் பிரியங்கவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதற்கிடையில், தெருக்களில் குப்பைகளை சேகரிக்கும் அந்த பெண் குழந்தையின் தாயை போலீசார் கண்டுபிடித்து காவல்நிலையம் அழைத்து வந்தனர். பின்னர், எச்சரித்து குழந்தையை ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications