காட்டிக்கொடுத்த பெட்ரோல் பங்க் வீடியோ.. பெண் மருத்துவர் கொலையில் சிக்கிய கொலையாளிகள்.. என்ன நடந்தது?
ஹைதராபாத்தில் 26 நிரம்பிய கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட சம்பவத்தில் கொலையாளிகள் நான்கு பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 26 நிரம்பிய கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட சம்பவத்தில் கொலையாளிகள் நான்கு பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஒரே நாளில் ஹைதராபாத் போலீசார் இவர்களை கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த 26 நிரம்பிய கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கடந்த புதன் கிழமை மாலை கொலை செய்யப்பட்டார். ஹைதராபாத்தின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.
அந்த பெண்ணை கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்து, அதன் பின் அந்த பெண்ணின் மூக்கை மூடி கொலை செய்து, பின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இருக்கும் பாலத்தின் கீழ் வைத்து எரித்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கைது செய்தது
இந்த கொலையில் தொடர்புடைய நான்கு பேரையும் போலீசார் சரியாக 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். கொலையாளிகள் முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
எப்படி
இந்த நிலையில் இவர்களை எப்படி கண்டுபிடித்தனர் என்று ஹைதராபாத் போலீசார் விளக்கம் அளித்துள்ளார். அதில், நாங்கள் கொலை நடந்த இடத்தை சல்லடை போட்டு தேடினோம். அங்கு கிடைத்த வாட்ச் உள்ளிட்ட பொருட்களை வைத்து கொலை செய்தவர்களின் வயதை கணித்தோம். அதன்பின் லாரி டயர் அடையாளத்தை வைத்து சோதனை செய்தோம்.
வீடியோ
அந்த நேரத்தில் அங்கு சென்ற லாரிகளை ஆய்வு செய்து, குற்றவாளியை நெருங்கினோம். அந்த பெண்ணை எரிப்பதற்காக குற்றவாளிகள் அருகில் இருக்கும் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் வாங்கி உள்ளனர். இரண்டு பேர் அருகருகே இருக்கும் மூன்று பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் வாங்கி உள்ளனர். இதை வைத்து அவர்களின் புகைப்படத்தை எடுத்தோம்.
கண்டுபிடிப்பு
இந்த வீடியோ மூலம் குற்றவாளிகள் நான்கு பேரில் மூன்று பேரின் புகைப்படம் கிடைத்தது. அதை எங்கள் டேட்டா பேஸில் சோதித்து அவர்களின் விலாசத்தை கண்டுபிடித்து கைது செய்தோம். இதற்காக நாங்கள் 10 தனிப்படைகளை அமைத்து இருந்தோம். மொத்தம் 70 போலீசார் இதற்காக பணியில் இருந்தனர்.
மோசம்
இந்த மூன்று பேரின் மூலம் இவர்களின் தலைவன் முகமது ஆரிப்பும் கைது செய்யப்பட்டான். இவர்களுக்கு மருத்துவ சோதனை செய்து அதையும் சாட்சியில் சேர்க்க போகிறோம். நான்கு பேருமே தங்கள் கொலை மற்றும் வன்புணர்வை ஒப்புக்கொண்டுள்ளனர் என்று போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.