ஹூண்டாய் மோட்டார்ஸை கொத்தி தூக்கிய தெலுங்கானா.. தென் கொரியாவுக்கே போய் வேலையை முடித்த ரேவந்த் ரெட்டி
ஹைதராபாத்: தெலுங்கானாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் மிகப்பெரிய சோதனை மையம் விரைவில் அமைய உள்ளது. தெலுங்கானா முதல்வர் முதல்வர் ரேவந்த் ரெட்டி, தொழில் துறை அமைச்சர் ஸ்ரீதர் பாபு ஆகியோர் இன்று தென் கொரியாவின் சியோல் நகரில் ஹூண்டாய் அதிகாரிகளைச் சந்தித்து, தெலுங்கானாவில் புதிய ஹூண்டாய் சோதனை மையம் அமைவதை உறுதி செய்தனர்.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான குழு, முதலீடுகளை ஈர்க்கும் விதமாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவில் தமது முதல் அரசுமுறை சுற்றுப்பயணத்தை முடித்து, தகவல் தொழில்நுட்படம் உள்ளிட்ட துறைகளில் ரூ.31,500 கோடி முதலீட்டுத் திட்டங்களைப் ஈர்த்துள்ளார் ரேவந்த் ரெட்டி. தெலுங்கானா மாநிலத்தில் 30,000-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து இன்று, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான குழுவினர் தென் கொரியா சென்று சியோலில் ஹூண்டாய் மோட்டார் நிறுவன அதிகாரிகளை சந்தித்தனர். முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் தொழில்துறை அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தென் கொரிய வாகன நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் மூலம் தெலுங்கானாவில் ஒரு மெகா சோதனை மையத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது.

தெலுங்கானாவில் அதிநவீன மெகா டெஸ்ட் சென்டரை அமைக்க ஹூண்டாய் உறுதி அளித்துள்ளதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த மையம், வாகன சோதனை பாதை மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் உட்பட ஒரு அதிநவீன சோதனை கார் உற்பத்தி ஆலை ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இந்த முதலீடு துணை நிறுவனங்கள் மற்றும் ஏராளமான சப்ளையர்களை ஈர்க்கும், நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தை விற்பனையில் மட்டுமின்றி, உற்பத்தியிலும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. உலக அளவில் மூன்றாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக இந்தியா திகழ்ந்து வருகிறது. பல சொகுசு கார்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் கார் மாடல்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.

உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி, பல முன்னணி வெளிநாட்டு கார் நிறுவனங்களும் பெரும் முதலீட்டுடன் இந்தியாவிலேயே உற்பத்தி ஆலைகளை அமைத்துள்ளன. தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் கார் நிறுவனம், 28 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஸ்ரீபெரும்புதூரில் கார் உற்பத்தி ஆலையை அமைத்தது.
சென்னையில் 535 ஏக்கர் பரப்பளவில் ஒரு பெரிய உற்பத்தி ஆலையைக் கொண்டுள்ளது ஹூண்டாய் நிறுவனம். ஹூண்டாய் தமிழ்நாட்டின் மிகப்பெரிய முதலீட்டாளராக இருந்து வருகிறது. சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் ஆலையில் இருந்து ஒரு வருடத்திற்கு 6.8 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது வரை 1 கோடிக்கும் அதிகமான கார்கள் இந்த ஆலையில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் ஹூண்டாய் நிறுவனம் தமது டெஸ்ட் செண்டரை விரைவில் அமைக்க உள்ளது கவனம் ஈர்த்துள்ளது. தெலுங்கானாவில் பிரமாண்டமாக அமைய உள்ள ஹூண்டாய் மையத்தால் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், தெலுங்கானாவின் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications