ஒற்றை ஏசி கோச், உள்ளே பல குழந்தைகள்! செகந்திராபாத் ஸ்டேஷன் வன்முறை.. திக்திக் நிமிடங்கள்! பரபர தகவல்
ஹைதராபாத்: அக்னிபாத்திற்கு எதிரான போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
மத்திய அரசு ராணுவத்திற்கு புதிய ஆட்சேர்பு கொள்கையான அக்னிபாத் திட்டத்தை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். 17.5 வயது முதல் 21 வயதுடையவர்கள் இந்தத் திட்டத்தில் இணையலாம்.
இவர்கள் அதிகபட்சம் 4 ஆண்டுகள் இத்திட்டத்தின் கீழ் பணிபுரியலாம்! அவர்களில் 25% பேர் மட்டுமே ராணுவத்தில் தொடர முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
|
போராட்டம்
இந்தத் திட்டத்திற்கு எதிராக முதலில் வட மாநிலங்களில் போராட்டங்கள் தொடங்கிய நிலையில், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ரயில்களும் தீ வைக்கப்பட்டன. இதனிடையே இந்தப் போராட்டம் மெல்லத் தென் மாநிலங்களுக்கும் பரவி வருகிறது. தெலங்கானாவில் உள்ள செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இன்று காலை நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுகூடி, போராட்டம் நடத்தினர்.
|
தீ வைப்பு
இந்தப் போராட்டம் ஒரு கட்டத்தில் கையை மீறிச் சென்றது. செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நுழைந்து கணினிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களைச் சூறையாடினர். பிளாட்பாரத்தில் இருந்த ஸ்டால்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி ரயில்நிலையத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்தச் சூழலில் அங்கிருந்த ரயில்களுக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
|
40 பேர்
இதனிடையே போராட்டக்காரர்கள் தீ வைத்து ரயில்களில் ஒன்றில் பயணிகள் இருந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. ரயில் நிலையத்தில் திடீரென நுழைந்த 5,000 போராட்டக்காரர்கள் செகந்திராபாத் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தனர். அப்போது சுமார் 40 பேர் இருக்கும் போதே ரயில் பெட்டிக்கு தீ வைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. ரயில்வே ஊழியர்களின் சரியான நேரத்தில் செயல்பட்டதால் குழந்தைகள் உட்பட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
|
துரிதம்
ஏ1 பெட்டிக்குள் 40 பயணிகள் இருக்கும் போதே போராட்டக்காரர்கள் தாக்குதலைத் தொடங்கியதாக ஏசி பவர் கார் மெக்கானிக்காக இருக்கும் சுமன் குமார் ஷர்மா தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இங்கே சுமார் 40 பேர் இருந்தனர், ஆனால் போராட்டக்காரர்கள் சுமார் 5,000க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். அப்போது ரயில்வே ஊழியர்கள் தான் துரிதமாகச் செயல்பட்டு அவர்களை காப்பாற்றினர்.

பாதுகாப்பு
மொத்தம் இரண்டு வாயில்கள் திறந்து இருந்தது. பயணிகளை ஒரு பக்கத்தில் மட்டும் செல்ல அனுமதித்தோம். அவர்கள் பத்திரமாக வெளியேறும் வரை ரயில்வே போலீசார் உரிய பாதுகாப்பை அளித்தனர்" என்றார். இந்தப் போராட்டம் காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தென்னக ரயில்வே சார்பில் வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பு
மத்திய அரசின் இந்த அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடி உள்ளனர். இத்திட்டத்தை உடனடியாக திரும்பப்பெறவேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளும் இதை எதிர்த்து உள்ளன.












Click it and Unblock the Notifications