பெங்களூர் சென்ற ஆம்னி பேருந்தில் தீ விபத்து - 25 பேர் பலி.. நள்ளிரவில் நடந்த சோகம்
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே பைக் மீது மோதியதில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் சென்ற பேருந்தில் சுமார் 42 பேர் பயணம் செய்த நிலையில், பேருந்துக்கு அடியில் பைக் ஒன்று சென்றதில் தீப்பிடித்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
கர்னூல் மாவட்டம் சின்ன டிக்கூர் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் காவெரி டிராவல்ஸ் ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தபோது அந்த ஆம்னி பஸ்ஸில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பைக் ஒன்று பஸ்ஸின் பின்புறம் மோதியுள்ளது. பேருந்துக்கு அடியில் பைக் சென்றதில் பேருந்தின் எரிபொருள் டேங்க் தீப்பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்தில் பேருந்தில் உறங்கிக்கொண்டிருந்த பயணிகள் அனைவரும் சிக்கிக்கொண்டனர்.

தீ மளமளவென பஸ்சின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்த நிலையில் பலரும் அவசரகால கதவு வழியே குதித்து உயிர் தப்பியுள்ளனர். இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். சுமார் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் 25 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பலியானவர்களில் பெரும்பாலான பயணிகள் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். ஆம்னி பேருந்து தீ விபத்தில் அடையாளம் காண அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த கோர விபத்து குறித்து வேதனை தெரிவித்துள்ளார். இந்தக் கோரச் சம்பவம் குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், காயமடைந்தவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளையும் வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.













Click it and Unblock the Notifications