பென்ஸ் காரில் ‘மைனர்’ சிறுவர்களால் 17 வயது சிறுமி பலாத்காரம்! எம்எல்ஏ மகனுக்கு தொடர்பு? அதிர்ச்சி
ஹைதராபாத் : தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் காரில் 17 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காருக்குள் வைத்து மைனர் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தவர்களும் மைனர் சிறுவர்கள்தான் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தில் தெலுங்கானா மாநில எம்.எல்.ஏ ஒருவரின் மகன் உள்ளிட்ட 5 சிறுவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சொகுசு காரில்
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மெர்சிடஸ் பென்ஸ் சொகுசு காரில், 17 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிறுமி பலாத்காரம்
புகாரைத் தொடர்ந்து ஐபிசி 354 பிரிவு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர். அதில், அச்சிறுமியின் குற்றச்சாட்டு உறுதியானதை தொடர்ந்து வழக்கை ஐபிசி 376 (கூட்டு பலாத்காரம்) பிரிவிற்கு மாற்றி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

5 பேர் கூட்டாக
பாதிக்கப்பட்ட சிறுமி தன்னை பலாத்காரம் செய்த ஒருவனை அடையாளம் காட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து இந்தக் கொடூரச் சம்பவத்தில், ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் எம்.ஐ.எம். கட்சி எம்.எல்.ஏ ஒருவரின் மகன், மாநில சிறுபான்மை வாரிய தலைவரின் மகன் உள்ளிட்ட 5 சிறார்களுக்கு தொடர்பு உள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணை
கூட்டு பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அம்மாநில எதிர்க்கட்சியான பா.ஜ.க வலியுறுத்தி உள்ளது.

கேசிஆர் அனுமதி வேண்டுமா?
இந்த சம்பவத்திற்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கிரிமினல் புகார் அளித்தும் ஹைதராபாத் காவல்துறை இதுவரை எந்த குற்றவாளியையும் கைது செய்யவில்லை. இந்த வழக்கில் போலீசார் மெத்தனமாக செயல்படுகின்றனர். இந்த வழக்கில் கைது செய்ய எம்ஐஎம் தலைவர் அசாதுதீன் அல்லது முதல்வர் கேசிஆரின் அனுமதிக்காக காவல்துறை காத்திருக்கிறதா?" என பாஜக செய்தித் தொடர்பாளர் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications