முனிவர் வேஷம் போட்டு பிரச்சாரம் செய்தார்.. மோடியின் யாத்திரை குறித்து சந்திரபாபு நாயுடு புகார்!
ஹைதராபாத்: முனிவர் வேடம் போட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக பிரதமர் மோடியின் கேதார்நாத் பயணம் குறித்து சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்,
தேர்தல் பிரச்சாரங்கள் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடி நேற்று அதிகாலை உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்துக்கு புறப்பட்டார்.
அங்குள்ள சிவன் கோவிலில் வழிபட்ட பிரதமர் மோடி, அங்கிருந்த பனிக்குகையில் தியானம் மேற்கொண்டார். பாரம்பரிய உடையில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்ட நிகழ்வு பெரிதும் பேசப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனது சிறப்பு பயணத்துக்கு அனுமதிக்கொடுத்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்தார்.
2000 நோட்டு.. ஆர்கே நகர் பாணி டோக்கன் சிஸ்டம்.. செந்தில்பாலாஜி மீது செந்தில் நாதன் பகீர்
சந்திரபாபு எதிர்ப்பு
இதைத்தொடர்ந்து இன்று பத்ரிநாத் கோவிலிலும் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். இந்நிலையில் பிரதமரின் ஆன்மிக யாத்திரை பயணத்துக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
முனிவர் வேடம்
பிரதமரின் ஆன்மிக யாத்திரை தேர்தல் விதிமீறல் என சந்திரபாபு நாயுடு தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். முனிவர் வேடம் பூண்டு பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ததாக அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.
தேர்தல் விதிமீறல்
யாத்திரையில் பிரதமர் மோடியின் தனிப்பட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டது தேர்தல் விதிமீறல் என்றும் சந்திரபாபு நாயுடு தேர்தல் ஆணையத்துக்கு அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ்
இதேபோல் பிரதமரின் கேதார்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும் என திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறியுள்ளது.கேதார்நாத் சென்ற பிரதமர் மோடி வளர்ச்சித் திட்டங்களையும் அறிவித்து, மக்களிடமும், ஊடகங்களிடமும் பேசியுள்ளார். இது ஒட்டுமொத்தமாக விதிகளை மீறும் செயலாகும். விதிமுறைகளுக்கு மாறானது என திரிணாமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.