புதுச்சேரி பிராந்தியமான ஏனாமிற்கு பெட்ரோல்-டீசல் வாங்க படையெடுக்கும் ஆந்திர மக்கள்.. அதிரடி உத்தரவு
ஹைதராபாத்: புதுச்சேரி பிராந்தியமான ஏனாமிற்கு பெட்ரோல்-டீசல் வாங்க ஆந்திர மக்கள் படையெடுத்த வண்ணம் இருந்தார்கள். இதனால் பிராந்திய நிர்வாக அதிகாரி சிவராஜ் மீனா, பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தி, காலை 5 மணி முதல் 8 மணி வரையிலான இந்த நேரத்தை ஏனாம் மக்களுக்கு பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இது ஒருபுறம் எனில் இயந்திரங்கள் மூலம் விவசாயிகள் பயிர் அறுவடை செய்வதால், பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஆந்திராவில் கடல் மற்றும் ஆற்றுபகுதியில் இறால் மற்றும் மீன் குட்டைகளில் அதிகமான மக்கள் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலை காரணமாக ஆந்திரா முழுவதுமே வழக்கத்தைவிட அதிகமான பெட்ரோல், டீசல் தேவைப்படுகிறது. இதேபோல் ஆந்திராவையொட்டியுள்ள புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மக்கள் பலர் ஏனாம் வருவதால் பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் ஏனாமில் பெட்ரோல் நிலையங்களில் காவல் துறை முன்னிலையில் எரிபொருள் விநியோகம் நடத்த ஏனாம் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது..
ஏனாம் காவல் கண்காணிப்பாளர் வரதராஜன் மேற்பார்வையில் மக்களுக்கு தடையின்றி எரிபொருள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது... ஆந்திரா மற்றும் ஏனாமை பொறுத்தவரை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து வரும் விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, கடந்த சில நாட்களாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனால் இன்று முதல், ஏனாம் உள்ளூர் மக்களுக்குப் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை, உள்ளூர் பெட்ரோல் நிலையங்களில் காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படியே விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது.
அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தை விட ஏனாமில் எரிபொருள் விலை ரூ. 12 முதல் 14 வரை குறைவாக உள்ளது. எனவே, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக விவசாயிகள்-பிளாஸ்டிக் கேன் மற்றும் பேரல்களுடன் எரிபொருள் வாங்க ஏனாமிற்கு திரண்டு வருகின்றனர்.
இது பற்றி ஏனாம் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் ஏனாமினி பல்வேறு சங்கங்கள் இப்பிரச்னையை எழுப்பியதைத் தொடர்ந்து, பிராந்திய நிர்வாக அதிகாரி சிவராஜ் மீனா, பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர், காலை 5 மணி முதல் 8 மணி வரையிலான இந்த நேரத்தை ஏனாம் மக்களுக்கு பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications