சின்ன விபத்து! உடனே குவிந்த போலீஸ்.. உள்ளே இருந்தது தங்கம் எல்லாம் இல்லை! தக்காளியாம்! காஸ்ட்லி தான்
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிய நிலையில், அதற்கு திடீரென போலீசார் சுற்றி வளைத்துப் பல மணி நேரம் பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.. ஏனென்றால் உள்ளே இருந்தது தக்காளியாம்.
வட இந்தியாவில் பல இடங்களில் இப்போது கனமழை கொட்டி வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்லி, ஹிமாச்சல பிரதேசம் என பல மாநிலங்களில் கனமழையால் வெள்ளமே ஏற்பட்டுள்ளது.

இந்த அதீத கனமழை காரணமாகப் பல இடங்களில் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நெடுஞ்சாலையில் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு விபத்துகளும் கூட ஏற்படுகிறது.
சுவாரசியம்: விபத்து சாதாரணமாக ஏற்படுவது தான். ஆனால், தெலங்கானாவில் விபத்தைத் தொடர்ந்து நடந்த சம்பவம் தான் இப்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தெலங்கானா மாநிலம் அடிலாபாத் என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 44இல் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து ஏற்பட்ட உடன் அந்த டிரக்கை சுற்றிலும் போலீசார் சூழ்ந்து கொண்டனர்..
உள்ளே ஏது கட்டுக்கட்டாக பணம் இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். உள்ளே இருந்தது மூட்டை மூட்டையாகத் தக்காளி. அதை யாரும் திருடிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவே இந்த போலீஸ் பாதுகாப்பு எல்லாம்.
திடீர் விபத்து: அடிலாபாத்தில் வாகனம் கவிழ்ந்த நிலையில் லாரியில் இருந்து ஏராளமான தக்காளிகள் வெளியேறியுள்ளது. அதை யாரும் திருடிவிடாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர். கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து தலைநகர் டெல்லிக்குத் தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு லாரி வழக்கம் போலச் சென்று கொண்டிருந்தது. அப்போது தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தக்காளி விலை உச்சம் தொட்டு இருக்கும் நிலையில், விபத்து ஏற்பட்ட லாரியை பொதுமக்கள் சூழ்ந்துள்ளனர். எங்கே அங்குள்ள மக்கள் தக்காளியைக் கொள்ளையடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அந்த டிரைவர் போலீசாரை தொடர்பு கொண்டுள்ளார். தக்காளி லாரி விபத்து என்று தெரிந்தவுடன் போலீசாரும் ஓடிச் சென்று பாதுகாப்பு அளித்துள்ளனர்.
தக்காளி: அந்த லாரியில் ரூ. 22 லட்சம் மதிப்பிலான 18 டன் தக்காளி இருந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் திடீரென உள்ளே புகுந்த இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க டிரைவர் திருப்பியுள்ளார். அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் லாரியில் இருந்த 20% தக்காளி சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்தில் அந்த டிரைவருக்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், லாரி கவிழ்ந்த நிலையில் சில நிமிடங்களில் அங்கே மக்கள் குவிந்துவிட்டனர். இதனால் பதறிப்போன அந்த டிரைவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பாதுகாப்பு: இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார், அந்த லாரிக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர். சிறு காயம் அடைந்த அந்த டிரைவர் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தக்காளி இருந்த இந்த லாரிக்கு போலீசார் பாதுகாப்பு அளித்தது தொடர்பான படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு தக்காளிக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகளே தக்காளியைச் சாலையில் கொட்டி போராட்டம் நடத்திய சம்பவங்கள் எல்லாம் நடந்தது. இப்போது அதே தக்காளி ரோட்டில் கொட்டியதால் போலீஸ் பாதுகாப்பு தரும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்துகளைக் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications