தெலுங்கானா போராட்டம்.. மன்னிப்பு கேட்ட ப.சிதம்பரம்.. ம்ஹூம் ஏற்க முடியாது என நிராகரிக்கும் பிஆர்எஸ்!
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்கான போராட்டத்தின் போது ஏற்பட்ட உயிரிழப்புகளுக்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேசியிருப்பது தேர்தல் களத்தில் விவாதப் பொருளாகி இருக்கிறது.
தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி நடைபெறுகிறது. தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கக் கூடும்; தொங்கு சட்டசபை அமையலாம் என பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவரான ப.சிதம்பரம் தெலுங்கானா போராட்டத்தின் போது எண்ணற்ற உயிரிழபுகள் ஏற்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கோருகிறது என்றார். மேலும் ஒரு மாநிலத்தைப் பிரிப்பதும் உருவாக்குவதும் குழந்தைத்தனமான விளையாட்டு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என கூறியிருந்தார் ப.சிதம்பரம். இப்போது ப.சிதம்பரத்தின் இந்த மன்னிப்பு பேசுபொருளாகவும் விவாதப் பொருளாகவும் உருவெடுத்துள்ளது.
ஆளும் பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவரான கே.டி.ராமராவ் கூறுகையில், 1952-ம் ஆண்டு முதல் தெலுங்கானா தனி மாநில போராட்டம் நடைபெற்றது. 2014-ம் ஆண்டு வரை பல நூறு தெலுங்கானா உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. இதற்கு காங்கிரஸ் கட்சி மட்டுமே காரணம். தெலுங்கானா மக்களுக்கு காங்கிரஸ் கட்சி செய்த துரோகங்கள் மறக்க முடியாதது; தெலுங்கானா மக்கள் மறக்கவும் மாட்டார்கள் என்றார்.
பிஆர்எஸ் எம்.எல்.சி கவிதா கூறுகையில், தெலுங்கானா தனி மாநில போராட்ட உயிர் தியாகங்களுக்காக ப.சிதம்பரம் நேற்று மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஏன் ராகுல் காந்தி தெலுங்கானா மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவில்லையாம்? ஏன் சோனியா காந்தி தெலுங்கானா மக்களிடம் மன்னிப்பு கேட்கவில்லையாம்? ப.சிதம்பரம் மட்டுமே தனித்து மன்னிப்பு கேட்கும் முடிவை அறிவித்துவிட்டாரா? தெலுங்கானா மாநிலத்துக்கு வந்தால் தெலுங்கானா மக்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதி அளிக்க வேண்டும். அதனைவிட்டு விட்டு ஏன் இத்தகைய மன்னிப்பு நாடகங்கள் எல்லாம்? நீங்கள் ஆயிரமாயிரம் முறை மன்னிப்பு கேட்டாலும் தெலுங்கானா மக்கள் ஒருபோதும் காங்கிரஸ் கட்சியை மன்னிக்கவே மாட்டார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications