மசூதியை நோக்கி அம்பு விடுவது போல சைகை செய்த ஹைதராபாத் பாஜக வேட்பாளர்! எதிர்ப்பால் மன்னிப்பு கோரினார்
ஹைதராபாத்: ஹைதராபாத் லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் கோம்பல்லா மாதவி லதா, மசூதியை பார்த்து அம்பு விடுவது போல செய்கை காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்தியாவில் 18-வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. நாளை முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 17 மாநிலங்கள் 4 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 102 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடக்கிறது. இதில், தமிழகம் மற்றும் புதுவையும் அடங்கும். அதேபோல, காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் மே மாதம் 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

முழு வீச்சில் தேர்தலுக்கான பிரசாரம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஹைதராபாத் தொகுதியில் பாஜக வேட்பாளராக கோம்பல்லா மாதவி லதா என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் ஓவைசியே தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். 2004 ஆம் ஆண்டில் இருந்து இந்த தொகுதியில் ஓவைசியே நின்று வருகிறார். இம்முறை ஓவைசியை வீழ்த்தும் முயற்சியுடன் பாஜக வேட்பாளர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அந்த வகையில், நேற்று ராமர் நவமியை முன்னிட்டு ஊர்வலமாக கோம்பல்லா மாதவி லதா சென்றார். பாஜக தொண்டர்கள் புடை சூழ ஊர்வலமாக சென்ற மாதவி, மசூதி ஒன்றை கடந்து சென்ற போது, அம்பு விட்டு தாக்குவது போல செய்கையால் செய்து காட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவும் அந்த வீடியோவில், ஹைதராபாத்தில் உள்ள சித்தியம்பர் சந்திப்பு அருகே திறந்த வெளி ஜீப் ஒன்றில் பேரணியாக வரும் லதா, மசூதி ஒன்றை பார்த்ததும் அம்பு ஒன்றை எடுத்து ஏவுவது போல தனது கையால் செய்கை காட்டும் காட்சிகள் அடங்கியுள்ளன. அப்போது பேரணியில் பங்கேற்ற பலரும் தங்கள் செல்போன்களால் அதை படம் பிடிக்கும் காட்சிகளும் அடங்கியுள்ளன.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பாஜக வேட்பாளர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வலியுறுத்தி வந்தனர். எனினும், இதுவரை தேர்தல் ஆணையம் தரப்பில் இது தொடர்பாக எந்த பதிலும் இல்லை.

இந்த நிலையில், தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ள பாஜக வேட்பாளர், இணையத்தில் பரவியது முழுமையான வீடியோ இல்லை என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கோம்பல்லா மாதவி லதா கூறியிருப்பதாவது:- என்னைப் பற்றிய ஒரு வீடியோ எதிர்மறையான கருத்துக்களுடன் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோ முழுமை இல்லாதது.
இருந்தாலும் கூட எனது நடவடிக்கையால் யாருடைய உணர்வுகளும் பாதிக்கப்பட்டு இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தனி நபர்கள் அனைவரையும் நான் மதிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இதனிடையே, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் தொகுதி வேட்பாளருமான ஓவைசி, மாதவி லதாவிற்கு எதிராக புகாரளிக்க தயாராகி வருவதாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications