ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீதான கல்வீச்சு.. ஆவேசமான நடிகை ரோஜா.. திடுக்கிடும் குற்றச்சாட்டு
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீதான நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதலுக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தான் காரணம் என நடிகை ரோஜா குற்றஞ்சாட்டி உள்ளார். தேர்தல் கமிஷன் உடனடியாக இ்தில் தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் மொத்தம் உள்ள 175 சட்டசபை தொகுதிக்கும், 25 லோக்சபா தொகுதிக்கும் ஒரே கட்டமாக மே 13ம் தேதி தேர்தல் நடைபெற போகிறது.. ஆந்திராவை அடுத்து யார் ஆள போகிறார் என்பதையும், இந்த நாட்டை யார் ஆள போகிறார்கள் என்பதையும் தீர்மானிக்கும் தேர்தல் அங்கு ஒரே நாளில் நடைபெற உள்ளதால் பிரச்சாரம் களைகட்டி உள்ளது.

ஆந்திராவை பொறுத்தவரை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஒரு அணியாகவும், தெலுங்குதேசம் தலைமையில் பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா ஆகியவை ஒரு அணியாகவும், காங்கிரஸ் தனி அணியாகவும் களம் இறங்கி உள்ளது.
ஆந்திரா முழுவதுமே அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன. நேற்று முன்தினம் விஜயவாடாவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான ஜெகன்மோகன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட போது, மர்ம நபர் நடத்திய கல்வீசினார். இதில் ஜெகனின் தலையில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஆளும் கட்சியினர் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
இந்த நிலையில் அம்பேத்கரின் 133-வது ஜெயந்தி விழாவையொட்டி நகரி எம்.எல்.ஏ.வும், சுற்றுலா துறை அமைச்சருமுன நடிகை ரோஜா புத்தூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கு தொண்டர்களுடன் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது ரோஜா பேசும்போது, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீசியதன் மூலம் கொலை முயற்சி நடந்திருக்கிறது. இதற்கு முழு காரணமும் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு தான் என்று கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன் நடந்த பொதுக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், 'ஆளுக்கு ஒரு கல் அல்லது கையில் கிடைத்ததை எடுத்துக் ஜெகன்மோகன் ரெட்டியை அடித்து விரட்டுங்கள்' என்று பேசியிருக்கிறார். அவர் பேசிய சில மணி நேரங்களிலேயே ஜெகன்மோகன் ரெட்டி மீது இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. எனவே இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக இ்தில் தலையிட்டு சம்பவத்திற்கு காரணமானவர்கள் மற்றும் அவர்களை தூண்டி விட்டவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்" இவ்வாறு ரோஜா ஆவேசமாக கூறினார்.
சந்திரபாபு நாயுடு மீது கல்வீச்சு: தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபுநாயுடு, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே காஜூவாக் பகுதியில் நேற்று வாகனத்தில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் அந்த வாகனம் மீது கல்வீசி விட்டு தப்பி ஓடி விட்டார். உடனே கட்சி தொண்டர்கள் அவரை பிடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் அவர் மாயமாகிவிட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கல் எறிந்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications