அடிதூள்.. சென்னை- ஹைதராபாத் இடையே புல்லட் ரயில்? தெலுங்கானா முதல்வர் வைத்த முக்கியமான பாயிண்டு
ஹைதராபாத்: தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களாக இருக்கும் சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் திட்டம் அமைக்கப்பட வேண்டும் எனத் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கோரிக்கை விடுத்திருக்கிறார். அதேபோல ஹைதராபாத்- அமராவதி இடையே புல்லட் ரயில் சேவை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நமது நாட்டில் எப்போதும் மிக முக்கிய பொது போக்குவரத்து சேவையாக ரயில்களே இருந்து வருகிறது. சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும் என்பதால் ரயில்களில் பயணிக்கவே பொதுமக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் நாட்டில் இருக்கும் ரயில் உட்கட்டமைப்பை விரிவுபடுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

புல்லட் ரயில்
ரயில்வே துறையும் கூட நாட்டில் ரயில் நெட்வோர்க்கை விரிவுபடுத்தி வருகிறது. மேலும், ரயில் சேவைகளிலும் பல புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது. வந்தே பாரத், சகாப்தி என அதிவேக ரயில்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகமாகவே இருக்கிறது. அதேபோல நாட்டின் புல்லட் ரயில் சேவையும் மும்பை- அகமதாபாத் இடையே கட்டப்பட்டு வருகிறது.
சென்னை- ஹைதராபாத்
இதற்கிடையே தென்னிந்தியாவிற்கும் புல்லட் ரயில் சேவை வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்கனவே பலரும் தென்னிந்தியாவுக்கான புல்லட் ரயில் சேவை தேவை எனக் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், இப்போது தெலுங்கானா முதல்வரும் அதே கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். தென்னிந்திய நகரங்களை இணைக்கும் வகையிலான புல்லட் ரயில் சேவை வேண்டும் என அவர் சொல்லியுள்ளார்.
ஹைதராபாத் புறநகர் பகுதியான ஷம்ஷாபாத்தில் இருந்து சென்னைக்கு புல்லட் ரயில் சேவை தேவை என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தியுள்ளார். இந்த ஷம்ஷாபாத் பகுதியில் தான் விமான நிலையம் அமைந்துள்ளது. அங்கிருந்து சென்னைக்குச் செல்லும் வகையில் புல்லட் ரயில் சேவை தேவை என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை ரயில்வே அதிகாரிகள் எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
3 ரயில்கள் மட்டும்
தென்னிந்தியாவின் இரு முக்கிய நகரங்களான சென்னை- ஹைதராபாத் இடையே இப்போது 3 தினசரி ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அந்த ரயில்களில் பயண நேரம் 12 முதல் 14 மணி நேரமாக இருக்கிறது. இந்த ரூட்டில் தான் புல்லட் ரயில் சேவை தேவை என ரேவந்த் ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார். இதன் மூலம் பயண நேரம் கணிசமாகக் குறையும்.
இரு தெலுங்கு தலைநகர்கள்
அதேபோல ஹைதராபாத்திலிருந்து ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதிக்கும் புல்லட் ரயில் சேவை தொடங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார். அமராவதி தற்போது ஆந்திராவின் புதிய தலைநகராக உருவாக்கப்பட்டு வருகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானா பிரிக்கப்பட்ட பிறகு, ஹைதராபாத் இரு மாநிலங்களுக்கும் ஒரு கூட்டுத் தலைநகராக இருந்தது. ஆனால், சந்திரபாபு நாயுடு முதல் பதவிக்காலத்திலேயே புதிய தலைநகராக அமராவதியை உருவாக்க முடிவு செய்து நடவடிக்கை எடுத்தார். அதற்குள் ஆட்சி மாறியதால் 5 ஆண்டுகள் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இப்போது மீண்டும் சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைந்துள்ள நிலையில், அமராவதி கட்டுமானம் வேகமெடுத்துள்ளது. இதற்கிடையே இரு தெலுங்கு மாநிலங்களின் தலைநகரை இணைக்கும் வகையிலும் புல்லட் ரயில் சேவை தேவை என ரேவந்த் ரெட்டி கோரிக்கை விடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications