"கவர்னர் உரை தேவையில்லை!" தெலங்கானா அரசு எடுத்த முக்கிய முடிவு.. டென்ஷனான ஆளுநர் தமிழிசை! பரபர தகவல்
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், இதில் கேசிஆர் அரசுக்கும் ஆளுநர் தமிழிசைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
தெலங்கானாவில் தற்போது கே சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடக்கம் முதலே மத்திய அரசுடன் தெலங்கானா முதல்வர் கேசிஆர் இணக்கமான போக்கையே கையாண்டு வந்தார்.
இருப்பினும், கடந்த சில மாதங்களாக மத்திய அரசை, குறிப்பாகப் பிரதமர் மோடியை முதல்வர் கேசிஆர் கடுமையாகத் தாக்கி பேசிவருகிறார். மேலும், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் திரட்டும் பணிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்
இந்தச் சூழலில் வரும் நாளை மார்ச் 7ஆம் தேதி முதல் தெலங்கானா அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே நிதி அமைச்சர் ஹரிஷ் ராவ் மாநில அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இல்லை என்பதால் ஆளுநரின் உரை இல்லாமல் நேரடியாகச் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் சாடல்
இந்த நடவடிக்கைக்கு அம்மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாட்டிற்கு புதிய அரசியலமைப்பு தேவை என்பதை வலியுறுத்தி வரும் கேசிஆர், இப்போதுள்ள சட்டங்களை மரபுகளையும் மதிப்பதில்லை என்று பாஜக மாநில தலைவர் சஞ்சய் குமார் சாடியுள்ளார். அதேபோல காங்கிரஸ் தலைவர் ஜீவன் ரெட்டி, "புதிய நிதியாண்டில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும்போது ஆளுநர் உரை தேவை. அப்போது தான் அந்த ஆண்டிற்கு அரசின் திட்டம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்" என்று அவர் தெரிவித்தார்.

அரசு தரப்பு விளக்கம்
ஆண்டின் தொடக்கத்தில் முதல்முறையாக மாநிலச் சட்டசபை கூடும்போது தான் ஆளுநர் உரை கட்டாயம் தேவை என்று விதி உள்ளது. கடந்த அக். மாதம் நடைபெற்ற கூட்டத்தொடரின் தொடர்ச்சி, அதாவது கடந்த கூட்டத்தொடரிலேயே இரண்டாவது முறையாகச் சட்டசபை கூடுகிறது என்பதால் ஆளுநர் உரை தேவையில்லை என்று கேசிஆர் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளார். இதே கருத்தைத் தான் மாநில சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெமுலா பிரசாந்த் ரெட்டியும் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் தமிழிசை அதிருப்தி
இந்நிலையில், தெலங்கானா அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆளுநர் தமிழிசை கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆளுநரின் உரையைத் தவிர்க்கச் சட்ட காரணங்களை மாநில அரசு மேற்கோள் காட்டியுள்ளது துரதிர்ஷ்டவசமானது. நீண்ட இடைவேளைக்குப் பின்னர் சட்டசபை கூடும் போதும் ஆளுநர் உரையைத் தவிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக முந்தைய அமர்வையே தொடர்வதாக அரசு அறிவித்துள்ளது.

அரசின் சாதனைகள்
ஆளுநரின் உரை என்பது அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை தான். முந்தைய ஆண்டில் அரசின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகளும் அடுத்த ஆண்டுக்கான கொள்கை குறிப்புகளும் ஆளுநர் அறிக்கையில் இடம் பெற்றிருக்கும். அரசின் செயல்பாடுகள் குறித்து அர்த்தமுள்ள விவாதங்களை நடத்த இது உதவும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை தவிர்த்து இருப்பதன் மூலம், அரசின் முந்தைய ஆண்டு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கும் வாய்ப்பை உறுப்பினர்கள் இழக்க நேரிடுகிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications