போராட்டத்தில் உயிரிழந்த.. 750 விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி - தெலங்கானா அரசு
ஹைதராபாத்: மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் போராட்டம் நடத்தி வந்தனர்.
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்காமல் இருந்ததது. வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது.
முதல் முயற்சியிலேயே தோல்வி தெரியுது.. விட்டுவிட வேண்டியதுதானே.. மத்திய அரசுக்கு ராமதாஸ் அட்வைஸ்!
விவசாயிகள் போராட்டம்
ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறினார்கள். விவசாயிகளை அடிக்கடி பேச்சுவார்தைக்கு அழைக்கும் மத்திய அரசு, வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதில் பிடிவாதமாக இருந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியதுடன், விவசாயிகளுக்கும் ஆதரவு கொடுத்தனர்.
வேளாண் சட்டங்கள் வாபஸ்
இந்த நிலையில் நேற்று மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து பாடுபடும் என்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் மோடி தெரிவித்தார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தலை மனதில் வைத்துதான் மத்திய அரசு இந்த முடிவெடுத்துள்ளதாகவும், எப்படியோ விவசாயிகளிடம் மோடி அரசு மண்டியிட்டு விட்டது என்றும் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.
தலா ரூ.3 லட்சம்
போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் மீதான வழக்கையும் வாபஸ் பெற வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில் டெல்லி போராட்டத்தின் போது இறந்த 750 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.
முதல் மாநிலம் தெலங்கானா
வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்ற பிறகு யிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு நிதி உதவி அறிவித்த முதல் மாநிலம் தெலங்கானா ஆகும். மேலும், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளையும், அவர்களது ஆதரவாளர்கள் மீதான வழக்கையும் திரும்பப் பெறவும் மத்திய அரசுக்கு முதல்வர் சந்திரசேகர் ராவ் கோரிக்கை விடுத்துள்ளார். தெலுங்கானா அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகையால் மாநிலத்திற்கு ரூ.22.5 கோடி செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது.