சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்திட்டங்களிலும் தெலுங்கு மொழி பாடம் கட்டாயம்.. தெலுங்கானா அரசு அதிரடி
ஹைதராபாத்: தெலுங்கானாவில் வரும் 2025-26 கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ் இ, ஐசிஎஸ் இ, ஐபி என எந்த பாடத்திட்டங்களை பின்பற்றினாலும் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழி கட்டாயம் என்று அம்மாநில அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்தி திணிப்பு சர்ச்சைகளுக்கு நடுவே காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் தெலுங்கானாவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து பாடத்திட்டங்களிலும் 9, 10 ஆம் வகுப்புகளுக்கு தெலுங்கு மொழிப்பாடத்தை கட்டாயம் ஆக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளது. பிற தாய்மொழி மாணவர்களுக்கு எளிமையாக புரியும் வகையில் பாடம் மற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெலுங்கானா மாநில பள்ளி கல்வித்துறை வெளியிட்ட உத்தரவில், வரும் 2025-26 கல்வி ஆண்டு முதல் தெலுங்கானாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தெலுங்க்கு மொழி பாடம் கட்டாயம். CBSE, ICSE, IB என எந்த விதமான பாடத்திட்டங்களை பின்பற்றினாலும் இந்த விதி பொருந்தும் எனவும் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் தெலுங்கை ஒரு பாடமாக கற்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
வெளி மாநில மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் எளிமையான முறையில் தெலுங்கு கற்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டே தெலுங்கு மொழி கட்டாயம் ஆக்கி தெலுங்க்கானாவில் சட்டம் கொண்டு வரப்பட்டது. எனினும், இதை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டவில்லை. முந்தைய அரசு, தெலுங்கு மொழி பாடத்தை கட்டாயம் ஆக்குவதில் அக்கறை காட்டவில்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. தெலுங்கானாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை மூலம் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. புதிய கல்விக்கொள்கை மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கியதாக இருந்ததால் இந்த புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு உறுதிபட தெரிவித்து வருகிறது. இதனால் மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்துக்காக (சமக்ர சிக்ஷா அபியான்) தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடியை மத்திய அரசு ஒதுக்கவில்லை.
இந்த நிதியை ஒதுக்குமாறு கேட்டு தமிழக அரசு சார்பில் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மும்மொழி கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி தர முடியும் என மத்திய கல்வி அமைச்சர் பேசியதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்வினையாற்றி வருகின்றன. இத்தகைய பரபரப்புக்கு இடையேதான் தென் மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவில் தெலுங்கு மொழிப்பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications