பொது இடங்களில் இனி மாஸ்க் கட்டாயமில்லை.. அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்கிய தெலங்கானா அரசு
ஹைதாபாத்: கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து தெலங்கானா அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் முதலில் பரவ தொடங்கிய கொரோனா, உலகின் அனைத்து நாடுகளையும் அலறவிட்டது. இதுவரை எந்தவொரு நாடும் கொரோனா வைரசை முழுமையாக அழிக்க முடியவில்லை.
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து கட்டுக்குள் வைப்பதில் உலக நாடுகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. பல்வேறு முயற்சிகளுக்குப் பின், இப்போது தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மெல்லக் குறைந்து வருகிறது.

கொரோனா
குறிப்பாக, உலகெங்கும் வேகமாக மேற்கொள்ளப்பட்டு கொரோனா வேக்சின் பணிகள் காரணமாகத் தீவிர பாதிப்பும் உயிரிழப்பும் வெகுவாக கட்டுக்குள் வந்தது. இதையடுத்து உலகின் பல்வேறு நாடுகளும் கொரோனா கட்டுப்பாடுகள் மெல்ல நீக்கப்பட்டு வருகிறது. வைரஸ் பாதிப்பு குறைந்ததால் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் ஏற்கனவே மாஸ்க் அணிவது போன்ற கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கி வருகிறது.

குறையும் கொரோனா
இந்தியாவைப் பொறுத்தவரைக் கடந்த 2020இல் கொரோனா பரவல் தொடங்கிய உடனேயே நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பொது இடங்களுக்குச் செல்ல 2 டோஸ் தடுப்பூசி, மாஸ்க் உள்ளிட்டவை கட்டாயம் என அறிவிக்கப்பட்டன. கிட்டதட்ட நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பொது இடங்களுக்குச் செல்ல மாஸ்க் கட்டாயம் என்ற விதி உள்ளது. இப்போது வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளில் மகாராஷ்டிரா அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.

தெலங்கானா
இதற்கிடையே தெலங்கானாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா கேஸ்கள் குறைந்து வருவதால், மாஸ்க்குகள் அணிவது கட்டாயம் உட்பட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்க தெலங்கானா அரசு இன்று முடிவு செய்துள்ளது. வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் தவிர மற்ற அனைவருக்கும் மாஸ்க் அணிவது என்பது கட்டாயமில்லை என்றும் அவர்களின் சுயவிருப்பத்தின் பெயரில் பின்பற்றலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் நீக்கம்
மாநிலத்தில் கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் இருப்பதாகவும், தினமும் 50க்கும் குறைவான வழக்குகள் பதிவாகி வருவதாகவும் மாநில பொதுச் சுகாதார மாநில இயக்குநர் ஜி ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்தார். இதன் காரணமாகவே தெலங்கானாவில் கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக வியாழக்கிழமை தான், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கியது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications