மஞ்சளாக மாறிய குடிநீர்.. டேங்கை திறந்து பார்த்தால்.. கொத்து கொத்தாக குரங்கு.. ஷாக்கான மக்கள்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் தண்ணீர் தொட்டி ஒன்றில் இறந்த நிலையில் குரங்குகள் செத்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்திய மக்கள் சிலருக்கு உடல் நலக்குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன.
நந்திகொண்டா நகராட்சியின் வார்டு எண் 1க்கு உட்பட்ட விஜயா விகார் பகுதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அந்த பகுதியை ஒட்டிய தண்ணீர் தொட்டியில் புதன்கிழமை குறைந்தது 10 குரங்குகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மோசமாக அழுகிய நிலையில் குரங்குகள் இங்கிருந்து எடுக்கப்பட்டன. உடல் முழுக்க அழுகிப்போய், பார்க்கவே கொடூரமாக இந்த குரங்குகள் காட்சி அளித்தன. இளமையான குட்டி குரங்குகளும் இங்கே இருந்தனர்.
இது தெரியாமல் அந்த தண்ணீர் டேங்கில் இருந்து மக்கள் 20 நாட்களாக தண்ணீர் குடித்துள்ளனர். கடந்த சில நாட்களாக வார்டு பகுதியில் உள்ள மக்கள் அசுத்தமான குடிநீரையே குடித்து வருவதாக கூறப்படுகிறது. புதன்கிழமை, தண்ணீர் தொட்டியின் மூடி அகற்றப்பட்டு இருந்ததை அந்த வழியாக நடந்து சென்ற அப்பகுதி மக்கள் கவனித்தனர். அங்கு ஆய்வு செய்ததில், தொட்டிக்குள் இருந்த தண்ணீரில் குரங்குகள் இறந்து மிதப்பதை கண்டனர். பின்னர், நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
என்ன நடந்தது?: தண்ணீர் தொட்டியின் மூடி திறந்திருந்ததால், 10 முதல் 20 குரங்குகள் உள்ளே நுழைந்துள்ளன. ஆனால் தப்பிக்க முடியாமல் உள்ளே இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் உண்மையில் இதுதான் குரங்குகள் பலியாக காரணமா இல்லை இதற்கு பின் வேறு விஷம செயல்கள் இருக்கலாமா என்று தெரியவில்லை. இதை பற்றிய விசாரணைகள் நடந்து வருகின்றன.
இரண்டு வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை இருந்தும், நகராட்சி குடிநீர் வினியோக ஊழியர்கள் அலட்சியம் காட்டுவதால், மக்கள் அசுத்தமான தண்ணீரை குடித்து வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை அப்போதே திறந்து பார்த்து இருந்தால் உள்ளே குரங்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும்.
கடுமையான வெயிலில் நீர் தேடி குரங்குகள் டேங்க் உள்ளே குதித்து இருக்கலாம். அதன்பின் தண்ணீர் அதிகம் ஆனதால் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நகராட்சி ஊழியர்கள் குரங்கின் உடல்களை அகற்றி தொட்டியை சுத்தம் செய்தனர். குரங்குகளின் உடல்களை பார்த்த மக்கள் சிலர் நகராட்சி ஊழியர்களை தாக்க முயன்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாகார்ஜுன சாகர் திட்ட மேற்பார்வை பொறியாளர் நாகேஷ்வர் ராவ் கூறியதாவது, அந்த தண்ணீர் தொட்டியில் இருந்து மூன்று நாட்களாக தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டதாகவும், அதை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது நடப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தொட்டி 50 வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்றார்.
இந்த தண்ணீரை பயன்படுத்திய மக்கள் சிலருக்கு உடல் நலக்குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் சிலர், உடல் முழுக்க அழுகிப்போய், பார்க்கவே கொடூரமாக இந்த குரங்குகள் காட்சி அளித்தன. குரங்குகளை பார்க்கவே அதிர்ச்சியாக இருந்தது. தண்ணீரின் நிறமும் மஞ்சள் நிறத்தில் மாறி இருந்தது என்று அதிர்ச்சி தரும் தகவல்களை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications