மழை வெள்ளத்தால் மூழ்கிய சாலை.. பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி.. உதவிய போலீஸார்
ஹைதராபாத்: மழை வெள்ளத்தால் சாலை மூழ்கியதால் நிறைமாத கர்ப்பிணியை டிராக்டரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீஸாருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழையால் பலத்த மழை பெய்து வந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. இதனால் சாலைகள் பெயர்ந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மஞ்சேரியல் மாவட்டம் சென்னூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள குளம் நிரம்பி, ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளும் வெள்ளநீரால் மூழ்கியுள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு கிராம மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
இந்த நிலையில் அந்த கிராமத்தில் ஒரு நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இவரை சென்னூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால் சாலை மூழ்கியதால் அவர்களால் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை.
இதையடுத்து அந்த பெண்ணை போலீஸார் ஒரு டிராக்டரில் ஏற்றி தண்ணீர் சூழ்ந்த சாலையில் வழியாக மருத்துவமனைக்கு பத்திரமாக கொண்டு சேர்த்தனர். இவர்களின் சேவை மனப்பான்மையை பலர் வெகுவாக பாராட்டினர்.












Click it and Unblock the Notifications