திருப்பூர் 'கண்டெய்னர் பணம்' நினைவிருக்கிறதா? தெலுங்கானா தேர்தலில் அதிர வைத்த ரூ.750 கோடி 'டிரக்'!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போலீசார் வாகன சோதனையில் சிக்கிய ரூ750 கோடி கண்டெய்னர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் 2016 சட்டசபை தேர்தலின் போது மிகவும் பேசப்பட்டது கண்டெய்னர் லாரி சம்பவம்தான். திருப்பூர் அருகே ரூ570 கோடியுடன் அடுத்தடுத்து பிடிபட்ட கண்டெய்னர் லாரிகள் யாருக்கு சொந்தமானது? அதில் இருந்த பணம் என்ன ஆனது? என்பது இன்று வரை "யாருக்கும்" புரியாத புதிராகத்தான் இருக்கிறது.

இந்த பணம், வாக்காளர்களுக்கு பட்டுவாடா கொடுக்க சென்றதாக ஒரு தரப்பு கூறப்பட்டது. இன்னொரு தரப்பு, தமிழ்நாட்டின் அதி முக்கிய புள்ளிகள், பணத்தை மாநிலம் விட்டு மாநிலம் இடமாற்றம் செய்வதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் வங்கிகளுக்கு உரிய பணம்.. ஆனால் போதுமான ஆவணங்கள் இல்லாததால் பிடிபட்டுவிட்டது என கூறப்பட்டது. இன்றைக்கும் வரையும் அந்த 3 கண்டெய்னர் மர்மம்தான் ஓயவே இல்லை.
அப்படியே இதேபோல ஒரு சம்பவம் தற்போது தேர்தல் நடைபெறும் தெலுங்கானா சட்டசபை தேர்தல் களத்திலும் நடந்துள்ளது. தெலுங்கானா சட்டசபைக்கு நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெர உள்ளது. 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து வாக்குகளும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலுக்காக தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது கண்டெய்னர் ஒன்றை போலீசார் மறித்தனர். அந்த கண்டெய்னரில் ரூ750 கோடி பணம் இருப்பது தெரியவந்ததால் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது. தமிழ்நாட்டின் திருப்பூர் போல இதுவும் வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு செல்லப்பட்ட பணமா? அல்லது ஆட்சி மாற்றத்தால் மேலிடம் பணத்தை இடம் மாற்றம் செய்கிறதா? என்கிற சந்தேகமும் ஏற்பட ஒட்டுமொத்த தெலுங்கானாவும் அதிர்ந்து போனது.
இதன் பின்னரே, இந்த 'கண்டெய்னர்' பணம் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமானது என தெரிய வந்தது. கேரளாவில் இருந்து ஹைதராபாத்துக்கு இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பான ஆவணங்களை பரிசீலனை செய்த பின்னர் பணம் கொண்டு செல்லப்பட்ட கண்டெய்னரை போலீசார் அனுமதித்தனர். இதனால் பரபரப்பும் பதற்றமும் தணிந்தது.












Click it and Unblock the Notifications