கியரை மாற்றும் காங்கிரஸ்.. .. கையை பிசையும் கேசிஆர்.. காணாமல் போன பாஜக! இது தெலுங்கானா அரசியல்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கே தேர்தல் ஜுரம் உச்சத்தில் இருக்கிறது. தற்போதைய சூழலில் அங்கே களநிலவரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.
தெலுங்கானாவில் இப்போது கேசிஆர் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. தெலுங்கானா மாநிலம் உருவானது முதலே அங்கே பிஆர்எஸ் கட்சியை ஆட்சியில் இருந்து வருகிறது.

கடந்த தேர்தலில் கூட பிஆர்எஸ் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. ஆனால், இந்த நிலை தெலுங்கானாவில் மொத்தமாக மாற இருக்கிறதாம். அங்கு வந்த பல சர்வேக்கள் இதையே காட்டுகிறது.
போட்டி யாருக்கு: தெலுங்கானா சட்டசபைத் தேர்தலைப் பொறுத்தவரை அங்கே நமக்கு சில விஷயங்கள் தெளிவாகத் தெரிகிறது. அவை குறித்து நாம் இதில் பார்க்கலாம். முதலில் அங்கே இப்போது பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தான் போட்டி. மேலும், தற்போது வந்துள்ள சர்வேக்களில் பெரும்பாலும் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க வாய்ப்புகள் அதிகம் என்றே கூறப்படுகிறது.
அடுத்து நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளூர் தலைவர்கள் மீதான கோபம் ஆகியவை ஆளும் பிஆர்எஸ் தரப்பு மீதான மக்கள் கோபத்தை அதிகரித்துள்ளது. அங்கே உள்ளூர் பிஆர்எஸ் தலைவர்கள் மீது கோபம் இருந்தால் கூட கேசிஆருக்காக கடந்த காலங்களில் மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால், இந்த முறை அப்படி இல்லை. முதல்வர் கேசிஆர் மீதே பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருப்பது தெரிகிறது.
என்ன பிரச்சினை: மேலும், சமீபத்தில் லோக் போல் என்ற அமைப்பின் சர்வே முடிவுகள் வெளியாகி இருந்தது. அதில் காங்கிரஸ் 41%-44% வாக்குகளுடன் 61-67 இடங்களை வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் பிஆர்எஸ் கட்சிக்கு 39-42% வாக்குகள் கிடைத்தாலும் அவர்களால் வெறும் 45-51 இடங்கள் மட்டுமே கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆளும் பிஆர்எஸ் கட்சியின் வாக்குகள் அனைத்தும் மாநிலத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே குவிந்துள்ளது. இதன் காரணமாகவே காங்கிரஸ்- பிஆர்எஸ் இடையே வாக்கு வங்கியில் பெரியளவில் வேறுபாடு இல்லை என்றாலும் கூட காங்கிரஸால் அதிகளவில் தொகுதிகளைக் கைப்பற்ற முடிகிறது.
காங்கிரஸ் கம்பேக்: காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரைக் கடந்த சில மாதங்களாகவே தெலுங்கானாவில் காங்கிரஸ் ஏறுமுகத்தில் இருக்கிறது. குறிப்பாகத் தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள ரேவந்த் ரெட்டி தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார். இது காங்கிரஸை அங்கே வளர்க்கப் பெருமளவு உதவி இருக்கிறது. அதையும் தாண்டி கடந்த செப். 17ஆம் தேதி ஹைதராபாத்தில் காங்கிரஸ் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் காங்கிரஸ் 6 வாக்குறுதிகளை முன்வைத்தது. அதற்கு மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
முன்பே சொன்னது போல இந்தத் தேர்தல் என்பது இரு முனை போட்டியாகவே இருக்கிறது. கடந்தாண்டு தெலுங்கானாவில் பாஜகவுக்கு நல்ல வளர்ச்சி இருந்த போதிலும், இப்போது அவர்கள் தேர்தல் ரேஸிலேயே இல்லை. தெலுங்கானாவில் பாஜக உள்ளூர் தலைவர்கள் யாரும் வலுவாக இல்லாததே இதற்குக் காரணமாகும். இதனால் அவர்கள் 5க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளதாகவே பல சர்வேக்களில் கூறப்பட்டுள்ளது.
தாக்கம் இல்லை: அடுத்து ஒவைசியின் மஜ்லீஸ் கட்சியைப் பொறுத்தவரை அவர்களுக்கு எப்போதும் போல ஓல்ட் ஹைதராபாத் நகரில் மட்டும் ஆதரவு இருக்கிறது. அங்கே கணிசமான தொகுதிகள் அவர்களுக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், அதைத் தாண்டி மாநிலம் தழுவியளவில் வரும் போது அவர்களால் பெரியளவில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications