வெளுத்து வாங்கிய மழை.. தெலங்கானாவில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்! மஞ்சள் அலர்ட் விடுத்தது வானிலை மையம்
ஹைதராபாத்: தெலங்கானாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், சில மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதத்தின் இறுதியில் தொடங்கிய வெயில் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் என வாட்டி வதைத்த நிலையில் இம்மாதம் ஓரளவு மழை பெய்து வருகிறது. தெலங்கானா மாநிலத்தை பொறுத்த அளவில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வந்திருக்கிறது. இந்நிலையில், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது.

இதன் காரணமாக தெலங்கானாவில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தெலங்கானா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் நீர் வரத்தே இல்லாமல் வறண்டு கிடந்த நிஜாம்சாகர், போச்சரம், கௌலாஸ்னா உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. நிஜாம்சாகர் அணைக்கு 38 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. அடுத்த இரண்டு நாட்களில் இந்த அணையின் அளவு 10 டிஎம்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்யாணி நீர்த்தேக்கத்திற்கும் நீர் அதிக அளவு வந்துக்கொண்டிருப்பதால் அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த அளவில் பிக்கானூரில் அதிகபட்சமாக 76.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மஞ்சேரியல், கரீம்நகர், பெத்தபள்ளி, ஜெயசங்கர் பூபாலப்பள்ளி, முலுகு, பத்ராத்ரி கொத்தகுடெம், மகபூப்நகர், நாகர்கர்னூல் மற்றும் வனபர்த்தி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் அதிக அளவு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல அடிலாபாத், குமுரம் பீம் ஆசிபாபாத், மஞ்சேரியல், நிர்மல், நிஜாமாபாத், ஜகித்யால், ராஜண்ணா சிர்சில்லா, கரீம்நகர், பெத்தபள்ளி, ஜெயசங்கர் பூபாலப்பள்ளி, முலுகு, பத்ராத்ரி கொத்தகுண்டம், மஹாபுத்ரி கொத்தகுண்டம், ஹம்மாபாத் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஏற்கெனவே கடந்த ஒரு வாரத்தில் பெய்த மழை காரணமாக நீர் நிலைகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன. எனவே ஆறு, ஏரி உள்ளிட்டவற்றின் கரை ஓரமாக குடியிருந்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications