லோக்சபாவை விடுங்க.. உள்ளாட்சி தேர்தலில் இப்படி ஒரு வெற்றியா.. எதிர்க்கட்சிகளை மிரளவைத்த கேசிஆர்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் 80 சதவீத இடங்களை அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கடசி (டிஆர்எஸ்) வென்று அசத்தி உள்ளது. இதன் மூலம் லோக்சபா தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லையே என்ற கவலையில் இருந்த அம்மாநில முதல்வர் கேசிஆர் இப்போது உற்சாகமாக உள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள 17 இடங்களில் 9 இடங்களில் மட்டுமே கேசிஆரின் தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சி வென்றது. இங்கு பாஜக முதல்முறையாக தனித்து போட்டியிட்டு 4 இடங்களில் வென்றது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கேசிஆர், உள்ளாட்சி தேர்தலில் அதிக கவனம் செலுத்தினார். இதன் விளைவாக மொத்தம் உள்ள 32 ஜில்லாவையும் தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சி வென்றுள்ளது. இது மட்டுமின்றி மொத்தம் உள்ள உள்ளாட்சி பதவிகளில் 80 சதவீத இடங்களை ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி வென்று மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.
தெலுங்கானாவில் நம்மூரைப்போல் அல்லாமல் ஜில்லா பரிஷித் டெரிடோரியல் கமிட்டி என்ற பெயரிலும், மண்டல் பரிஜா பரிசாத் என்ற பெயரிலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதற்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் ஜில்லா தேர்தலில் மொத்தம் உள்ள 538 பொறுப்பில் 445 இடங்களை தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி வென்றுள்ளது.காங்கிரஸ் 75 இடங்களையும். பாஜக 8 இடங்களையும், மற்றவர்கள் 5 இடங்களையும் கைப்பற்றி இருந்தனர்.
மண்டல் பரிஷித் தேர்தலில் கேசிஆரின் கட்சி, மொத்தம் உள்ள 5816இடங்களில் 3 ஆயிரத்து 557 இடங்களை வென்றுள்ளது.காங்கிரஸ் கட்சி 1377 இடங்களையும், பாஜக 211 இடங்களையும், மற்றவர்கள் 636 இடங்களையும் வென்றுள்ளனர்.
மெகபூபா நகர், கரீம்நகர்,வாரங்கல் நகர்புறம், வாரங்கல் ஊரகம் உள்ளிட்ட மாவட்டங்களில் எதிர்க்கட்சிகள் சுத்தமாக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இதற்கிடையே ஜில்லா பரிஷித தலைவர் தேர்தல் ஜுன் 8ம் தேதி நடக்கிறது. அதில் 32 ஜில்லாக்களுக்கும் வெற்றி பெற்ற தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி நிர்வாகிகளே தலைவர்களே பொறுப்பேற்க உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications