தெலுங்கானாவில் ஆட்சியை பிடிப்பது யார்?.. தொடங்கியது ரூ.500 கோடி பெட்டிங்
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கு வெற்றி கிடைக்கும்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பலிக்குமா? காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் முதலமைச்சர் யார் என்பது குறித்த சூதாட்டம் சூடு பிடித்துள்ளது.
தெலுங்கானா உட்பட 5 மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 11-ம் தேதி எண்ணப்பட உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின.
அதனால், வேட்பாளர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் முடிவை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது தொடர்பான கருத்துகள், காரசாரமான விவாதங்கள், மீம்ஸ்கள் சமூக ஊடகங்களில் அனல் பறந்து வருகின்றன.
முதல்வர் யார்
குறிப்பாக தெலுங்கானாவில் எந்தக் கட்சி வெற்றி பெறும்? எந்த வேட்பாளர் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பலிக்குமா? காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் முதல்வர் யார்? உள்ளிட்ட பல கேள்விகளை முன்வைத்து ஒரு பிரிவினர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோடிக்கணக்கில் பணம்
தெலுங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும், தெருவோர கடைகள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை தெலுங்கானா தேர்தல் செய்தகிளே தற்போதைய பேசு பொருளாகி உள்ளது. அதனால், ஹைதராபாத், வாரங்கல், கம்மம் ஆகிய தெலுங்கானா நகரங்களிலும், விஜயவாடா, குண்டூர், திருப்பதி, சித்தூர், மதனபல்லி ஆகிய ஆந்திரா நகரங்களிலும் மறைமுக மாக கோடிக்கணக்கில் பணம் கட்டப்பட்டு வருகின்றன.
ரூ. 500 கோடி வரை நீள்கிறது
10 ஆயிரத்தில் தொடங்கும் இந்த சூதாட்டம் லட்சக் கணக்கில் நடந்து வருவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. ஒரு கட்டத்தில் 500 கோடிக்கும் மேல் சூதாட்டத்தில் ஈடுபடுவதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.
கூட்டணி
தேர்தல் அறிவிப்புக்கு முன்பு தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால், காங்கிரஸ், தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட், ஜனசமிதி ஆகியவை கூட்டணி அமைத்த பிறகு நிலைமை சற்று மாறியது.
கருத்து கணிப்பு
இந்தக் கூட்டணியை ஆதரித்து ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தனர். கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் டிஆர்எஸ் கட்சியின் வெற்றி கேள்விக் குறியாகி உள்ளது.
விவாதம்
ஒருவேளை கூட்டணி மேஜிக் வெற்றி பெற்றால் முதல்வர் யார் என்ற கேள்வியும், விவாதமும் காங்கிரஸ் தொடங்கி உள்ளது. மாநில காங்கிரஸ் கட்சி தலைவரான உத்தம் குமார் ரெட்டி அல்லது ரேவந்த் ரெட்டி ஆகியோரே முதலமைச்சராக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
எத்தனை தொகுதிகள்
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் டிஆர்எஸ் கட்சிக்கே சாதகமாக இருந்தாலும், விஜயவாடாவை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியான லகடபாடி ராஜகோபாலின் கூற்று சற்றே வித்தியாசப்படுகிறது. அவர் நடத்திய கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கூட்டணி 75 முதல் 85 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது.
அடிபட்டு போகுமோ
அவரது முந்தைய கணிப்புகள் சரியாக இருந்ததால், தற்போதைய கருத்துக் கணிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், ஊடகங்கள் நடத்தி, மக்கள், அரசியல் கட்சிகளின் மண்டையை பிய்த்துக் கொள்ள வைத்த கருத்துக் கணிப்புகள்... முற்றிலும் அடிபட்டு போகுமோ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.