80,000 ரூபாய் ஸ்வீட்டை, நள்ளிரவில் மனைவிக்கு ஊட்டிவிட்ட கடப்பா கணவர்! கூகுளில் தேடியது என்ன தெரியுமா
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில், தனது மனைவியை விபத்தில் உயிரிழந்ததாக நாடகமாடிய கணவனின் பின்னணியில் இருந்த திடுக்கிடும் கள்ளக்காதல் விவகாரம் மற்றும் திட்டமிட்ட கொலைச் சதி பரபரப்பை தந்துள்ளது.. இந்த கொலையை அரங்கேற்ற கணவன் செய்த செயல், அதற்கு மேல் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கறிது. இதுகுறித்த விசாரணையையும் போலீசார் நடத்தி வருகிறார்கள்.
கடப்பா மாவட்டம் புரோத்தூரைச் சேர்ந்த பத்ரிபள்ளி கிரண் என்பவருக்கும், 31 வயதான பத்மஜா என்பவருக்கும் திருமணம் நடந்து சில ஆண்டுகள் ஆகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்மஜா தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அப்போது தனது மனைவி கட்டிலில் இருந்து தவறி விழுந்ததால் சுயநினைவை இழந்துவிட்டதாகவும், அதன் பின்னரே அவர் உயிரிழந்ததாகவும் கிரண் தனது உறவினர்களிடம் கூறி அழுதுள்ளார்.
ஆரம்பத்தில் இதனை நம்பிய குடும்பத்தினர், பத்மஜாவின் தந்தை ராஜா குல்லாயி கொடுத்த புகாரின் பேரில் சந்தேகமடைந்தனர். தனது மகளின் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக அவர் அளித்த புகாரை அடுத்து, போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.
பத்மஜாவின் உடல் போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பப்பட்டபோதுதான், அந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அவரது உடலில் விஷம் கலந்திருப்பது உறுதியானதும், போலீசார் கணவன் கிரணை சுற்றி வளைத்தனர். காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், கிரண் ஒரு வருடமாக ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை ஒழித்துக்கட்ட அவர் போட்ட திட்டம், சினிமாவில் வரும் காட்சிகளை விடவும் கொடூரமானது.
யாரும் சந்தேகிக்காத வகையில் கொலையை அரங்கேற்ற நினைத்த கிரண், சமூக வலைதளங்களில் "தடயமே இல்லாமல் விஷம் கொடுத்து கொலை செய்வது எப்படி?" என்று பல நாட்களாகத் தேடியுள்ளார். அப்போது ஒரு யூடியூபர் மூலம் தொடர்புகொண்ட கிரண், சுமார் 80,000 ரூபாய் செலவழித்து ஒரு சக்திவாய்ந்த விஷத்தை வாங்கியுள்ளார். கடந்த ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவில், இனிப்புகளில் அந்த விஷத்தைக் கலந்து பத்மஜாவிற்கு கொடுத்துள்ளார்.
இனிப்பைச் சாப்பிட்ட பத்மஜா மயங்கி விழுந்தாலும், நீண்ட நேரமாகியும் அவர் உயிர் பிரியவில்லை. அவர் மூச்சு விடுவதை கவனித்த கிரண், தனது திட்டம் தோல்வியடைந்து மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில், அருகில் இருந்த தலையணையை எடுத்து பத்மஜாவின் முகத்தில் வைத்து பலமாக அழுத்தியுள்ளார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு துடிதுடித்து பத்மஜா உயிரிழந்ததை உறுதி செய்த பின்னரே அவர் விலகியுள்ளார்.
விசாரணையில், தனது மனைவிக்குத் துரித உணவுகள் பிடிக்கும் என்பதும், அவரது உடல் பருமன் தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறி கிரண் திசைதிருப்ப முயன்றார். ஆனால், கள்ளக்காதல் விவகாரமே இந்தக் கொலைக்கு அச்சாணியாக இருந்ததை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
இப்போது கிரண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு விஷம் சப்ளை செய்த அந்த மர்ம யூடியூபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அந்த யூடியூபர் தனது செல்போனை அணைத்துவிட்டு தலைமறைவாகியுள்ள நிலையில், தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு இல்லத்தரசியின் மரணத்தின் பின்னணியில் ஒளிந்திருந்த இந்த டிஜிட்டல் யுகக் கொலைச் சதி கடப்பா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications