4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்! ஹைதராபாத் பள்ளிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்தது தெலங்கானா அரசு
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் 4 வயது சிறுமி 2 மாத காலமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு அரசு அளித்திருந்த அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கொடுமை! ஸ்மார்ட் போன் வாங்க ரத்தத்தை விற்க வந்த 16 வயது சிறுமி! தடுத்த மருத்துவமனை நிர்வாகம்
பலாத்காரம்
பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் 4 வயது சிறுமி பயின்று வந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே சிறுமியின் நடத்தையில் மாற்றம் தெரிந்துள்ளது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் விசாரணை மேற்கொண்டதில் பள்ளியில் தான் எதிர்கொண்ட கொடுமையை மழலை மொழியில் சிறுமி விவரித்துள்ளார். அதாவது பள்ளி முதல்வரின் வாகன ஓட்டுநராக உள்ள ரஜினி குமார் என்பவர் கடந்த இரண்டு மாதங்களாக சிறுமியை தொடர் பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என்றும் அவர் மிரட்டியுள்ளார்.
அங்கீகாரம்
இதனையடுத்து பள்ளி முதல்வரிடம் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் ரஜினி குமாரை கடுமையாக தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் குறித்து ரஜினி குமார் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு அரசு அளித்திருந்த அங்கீகாரத்தை ரத்து செய்ய அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
குழு
மேலும் இதுபோன்று குற்றங்களை தவிர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இக்குழுவின் தலைவராக கல்வித்துறை செயலாளர் செயல்படுவார். குழுவில் பள்ளிக் கல்வி இயக்குநர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறைச் செயலாளர் மற்றும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக குழந்தைகளைப் பாதுகாப்பது தொடர்பான மூத்த அதிகாரி ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்த குழு ஆய்வு மேற்கொண்டு ஒரு வாரத்திற்கு அறிக்கையை சமர்ப்பிக்கும்.
மாற்றம்
அமைச்சர் உத்தரவிட்டதையடுத்து தற்போது பள்ளி மூடப்பட்டுள்ளது. இப்பள்ளியில் சுமார் 700 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கல்வியாண்டின் நடுப்பகுதியான இந்நேரத்தில் மற்ற பள்ளிகளில் இவர்களுக்கு சீட் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என்று சொல்லப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இக்கொடுமைகளை குறைக்க வேண்டும் எனில் பொது மனோநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பெண்களை போக பொருட்களாக பார்க்கும் நிலை மாற வேண்டும் என்றும் மகளிர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.