கணவருடன் பீச்சில் திருமண நாளை கொண்டாடிய மனைவி மாயம்.. ட்விஸ்ட்டோ ட்விஸ்ட்!.. போலீஸார் அதிர்ச்சி
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் விசாகப்பட்டின கடற்கரையில் மூழ்கியிருப்பார் என கருதப்பட்ட மனைவி இரு தினங்கள் கழித்து நெல்லூரில் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள ஃபார்மா நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஸ்ரீனிவாஸ். இவருக்கும் சாய்பிரியா என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி திருமணமானது.
இந்த நிலையில் இருவரும் தங்களுடைய இரண்டமாண்டு திருமண நாளை கொண்டாட முடிவு செய்தனர். அதன்படி ஸ்ரீனிவாஸும் சாய்பிரியாவும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர் கே கடற்கரைக்கு ஜூலை 25 ஆம் தேதி சென்றனர்.

கடற்கரை மணல்
அந்த கடற்கரை மணலில் அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த தம்பதி அங்கு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். கடற்கரையில் விளையாடி அதையும் செல்பியாக எடுத்திருந்தனர். அப்போது திடீரென ஸ்ரீனிவாஸின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. இதனால் சாய் பிரியாவை விட்டுவிட்டு சற்று நகர்ந்து போய் போன் பேசியுள்ளார் ஸ்ரீனிவாஸ்.

அதிர்ச்சி
போனை பேசிவிட்டு வந்த ஸ்ரீனிவாஸுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த இடத்தில் சாய் பிரியாவை காணவில்லை. இதனால் சாய்பிரியா கடல் அலையில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என ஸ்ரீனிவாஸ் அஞ்சினார். இதையடுத்து அங்கிருந்த போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

காவலர்கள்
பின்னர் கடற்படை காவலர்களுடன் இணைந்து போலீஸார் சாய்பிரியாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் கிடைக்காததால் ஹெலிகாப்டர், கப்பல் மூலம் தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருந்தன. சாய்பிரியா காணாமல் போன சம்பவம் விசாகப்பட்டின மாநகராட்சி மேயர் வரை சென்று. அவரும் தேடும் பணிகளை முடுக்கிவிட்டார். ஆனாலும் சாய்பிரியாவை காணவில்லை.

சாய்பிரியா
இப்படி இருக்கும் போது சாய்பிரியா பத்திரமாக இருக்கிறார் என்பது அவரது செல்போன் சிக்னல் மூலம் தெரிந்தது. அந்த சிக்னல் பெங்களூரில் இருப்பது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் திருப்புமுனையாக சாய்பிரியா தனது தாய்க்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.

காதல்
அதில் நான் பத்திரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஆந்திராவில் நெல்லூரில் ஒரு முறை சாய் பிரியாவின் செல்போன் சிக்னல் அங்கு ஆக்டிவ்வில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து விசாரணையில் ஸ்ரீனிவாஸை திருமணம் செய்து கொள்ள சாய் பிரியாவுக்கு விருப்பம் இல்லை என தெரிய வந்தது. திருமணத்திற்கு முன்பே ரவி என்பவரை சாய்பிரியா காதலித்து வந்ததும் திருமணமாகியும் அவருடனான பழக்கம் சாய்பிரியாவுக்கு இருந்ததும் தெரியவந்தது.

ஒரு கோடி செலவு
ஆர் கே கடற்கரையில் இருந்து சாய்பிரியா ரவியுடன் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். மேலும் கடல் அலையில் சிக்கியதாக கூறப்பட்ட சாய்பிரியாவை கண்டுபிடிக்க இதுவரை ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்திருந்தனர். சாய்பிரியாவையும் ரவியையும் கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications