நாளை ஆந்திர முதல்வராகும் சந்திரபாபு நாயுடு.. காலியான கஜானா.. வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எளிதல்ல
ஹைதராபாத்: ஆந்திர மாநில முதல்வராக நாளை சந்திரபாபு நாயுடு பதவியேற்கிறார். அவர் முதல்வரான உடன் முதல் கையெழுத்து என்னவாக இருக்கும் என்பது குறித்து இப்போதே ஆந்திர ஊடகங்கள் தீவிரமாக விவாதித்து வருகின்றன. ஆனால் உண்மையில், ஆந்திரா கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இதனால் நாயுடுவால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? என கேள்வி எழுந்துள்ளது.
ஆந்திராவில் அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சி வரலாற்றில் இல்லாத அளவிற்கு வெற்றியை பதிவு செய்திருக்கிறது. பா.ஜனதா மற்றும் ஜனசேனா கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்த அந்த கட்சி, மொத்தமுள்ள 175 இடங்களில் தனித்தே 135 இடங்களை பெற்று இருக்கிறது. அதன் கூட்டணி கட்சியான பவன் கல்யாணின் ஜனசேனா 21 இடங்களில் வென்றுள்ளது. இன்னொரு கூட்டணி கட்சியான பாஜக 8 இடங்களில் வென்றுள்ளது. அதேநேரம் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் வெறும் 11 இடங்களில் மட்டுமே வென்றது. இதன் மூலம் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.

இதையடுத்து ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வராக சந்திரபாபு நாயுடு நாளை (புதன்கிழமை) விஜயவாடாவில் பதவியேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. முதற்கட்டமாக சந்திரபாபு நாயுடு தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்களால் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்தகட்டமாக ஆளுநரின் அழைப்பின் படி நாளை முதல்வராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட உள்ளார்..
இந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் வெற்றிக்கு, அவரது கட்சி வழங்கியிருந்த 'சூப்பர் சிக்ஸ்' வாக்குறுதிகளும் காரணமாக பார்க்கப்படுகிறது. ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு சந்திரபாபு நாயுடு அளித்த வாக்குறுதிகளே காரணம் என்று சொல்கிறார்கள்.
அந்த ஆறு வாக்குறுதிகள் என்னென்ன: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.20,000, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,500, பெண்களுக்கு இலவச பஸ் பயணம், முதியோர் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்வு (இது ஏப்ரல் மாதம் முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்) உள்ளிட்ட அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு இருந்தது..
ஆனால் இந்தஅளவிற்கு வாக்குறுதியை நிறைவேற்றும் அளவிற்கு ஆந்திர மாநில அரசு இல்லை என்பதே எதார்த்தமான உண்மை. ஏனெனில் ஆந்திர மாநிலம் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு சமர்ப்பித்த 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.4.83 லட்சம் கோடி பொதுக்கடன் இருப்பது தெரியவந்ததும். மேலும் ரூ.1.39 லட்சம் கோடி அரசு உத்தரவாதங்கள் மற்றும் ரூ.26,296 கோடி மத்திய அரசின் கடன்களும் இருந்தது. நடப்பு 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வருவாய் மதிப்பீடு ரூ.2.05 லட்சம் கோடியாகவும், செலவினம் ரூ.2.30 லட்சம் கோடியாகவும் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
எனவே ஆந்திர மாநில அரசின் கஜானா காலியாகும் நிலையில் இருப்பதால் தெலுங்குதேசம் அறிவித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. மாநில அரசின் சமூக நலத்துறை ஓய்வூதியங்களை வழங்குவதற்கே ஜூலை 1-ந்தேதிக்குள் ரூ.4,500 கோடிக்கு மேல் நிதி தேவைப்படுவதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அத்துடன் பணியாளர்களுக்கான ஊதியம், ஓய்வூதியம் என மேலும் ரூ.6,000 கோடி தேவைப்படும் . மொத்தமாக ஜூலை 1-ந்தேதிக்குள் ஆந்திர அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் தேவைப்படும். அத்துடன் பணியாளர்களுக்கான ஊதியம், ஓய்வூதியம், கடன் தவணை, வட்டி போன்றவற்றுக்காக ஆண்டுக்கு ரூ.1.30 லட்சம் கோடிக்கு மேல் ஆந்திர அரசுக்கு செலவாகும்.
தமிழகத்தை போல் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் அறிவிக்கப்பட்டு இருப்பதால் இதற்காக மட்டுமே ஆண்டுக்க 2000 கோடி செலவாகும் . இதுதவிர மாநில அரசு பஸ்களில் மாதந்தோறும் ரூ.450 கோடி முதல் ரூ.500 கோடி வரை டிக்கெட் வருவாய் வரும் நிலையில், இதில் 40 சதவீதம் வரை வருவாயும் குறைந்துவிடும். ஒட்டுமொத்தமாக சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ள இலவச திட்டங்களுக்காக அதிக அளவு நிதி தேவைப்படுவதால் அதை நிறைவேற்றுவது சவாலான காரியமாக இருக்கும். சந்திரபாபு நாயுடு, இப்போது மத்திய ஆட்சியில் கிங் மேக்கர் என்கிற அளவில் இருப்பதால், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு பெற வேண்டும். அப்படி சிறப்பு அந்தஸ்து வாங்கினால் பிரச்சனையை ஓரளவு சமாளிக்க வாய்ப்பு உள்ளது.
இல்லாவிட்டால் அரசின் வருவாயை பெருக்க, மதுபானங்கள் விலை மற்றும் விற்பனையை அதிகரிப்பது, பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்துவது, வீடுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்தவது, நில வழிகாட்டி மதிப்பை உயர்த்துவது, வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான சொத்தவரிகளை உயர்த்துவது, பேருந்து கட்டணத்தை உயர்த்துவது, மணல் குவாரிகளை அதிக அளவில் கண்டறிந்து குத்தகைக்கு விடுவது உள்பட பல கடினமான முடிவு எடுக்க வேண்டிய நிலை வரும்.












Click it and Unblock the Notifications