பஞ்சாயத்து தலைவர் to முதல்வர்.. ABVP - காங்கிரஸ் வரை.. திகுதிகு வளர்ச்சி! யார் இந்த ரேவந்த் ரெட்டி?
ஹைதராபாத்: தெலங்கானாவின் புதிய முதலமைச்சராக காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்க உள்ளார். யார் இந்த ரேவந்த் ரெட்டி? அவரது அரசியல் பயணம் குறித்து பார்க்கலாம்.
4 மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இவற்றில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வென்றது. தெலுங்கானாவில் உள்ள மொத்தம் 119 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சி அமைக்க 60 இடங்களில் வெற்றி பெறுவது அவசியம். தெலுங்கானாவில் பாரதிய ராஷ்டிர சமிதி - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கணித்தபடியே தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 64 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உடனேயே அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
முதல் முறையாக காங்கிரஸ்: தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சிதான் வெற்றி பெற்றது. கேசிஆர் தான் கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்று முதல்வரானார். இந்நிலையில் முதல் முறையாக ஆட்சியை காங்கிரஸ் கட்சியிடம் பறிகொடுத்தார் கேசிஆர். தெலுங்கானாவின் புதிய முதல்வராக ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்க உள்ளார்.
காங்கிரஸ் கட்சி முதல் முறையாக தெலங்கானா மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளது. இதனை சாத்தியமாக்கி கொடுத்தவர் தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டி. தெலுங்கு தேசம் கட்சியில் பணியாற்றிய ரேவந்த் ரெட்டி கடந்த 2017ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து, தலைமையின் நம்பிக்கையைப் பெற்று, இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சாரதியாக வழிநடத்தினார்.

யார் இந்த ரேவந்த் ரெட்டி?: ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் மகபூப்நகர் மாவட்டத்தின், கொண்டாரெட்டி பல்லி எனும் குக்கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் அனுமுலா ரேவந்த் ரெட்டி. மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபடத் துவங்கினார். உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ரேவந்த் ரெட்டி, அப்போது ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யில் இணைந்து செயல்பட்டார்.
2006ஆம் ஆண்டில் மிட்ஜல் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார் ரேவந்த் ரெட்டி. பின்னர் அவரது அரசியல் வளர்ச்சி விஸ்வரூபம் கண்டது. 2007-ம் ஆண்டு, ஒருங்கிணைந்த ஆந்திராவில் உள்ள மகபூப்நகர் மாவட்டத்தில் இருந்து சுயேச்சை மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.
2009-ல் கோடங்கல் சட்டப்பேரவை தொகுதியில், ரேவந்த் ரெட்டியை வேட்பாளராக போட்டியிட வைத்தார் சந்திரபாபு நாயுடு. அப்போது ரேவந்த் ரெட்டி காங்கிரஸ் வேட்பாளர் குருநாத் ரெட்டியை தோற்கடித்து முதன்முறையாக சட்டப்பேரவை உறுப்பினரானார். 5 முறை எம்.எல்.ஏவான காங்கிரஸ் கட்சியின் குருநாத் ரெட்டியை, ரேவந்த் ரெட்டி வீழ்த்தியது பரபரப்பாக பேசப்பட்டது.
தொகுதி பற்றி தெரியாமலே வென்றவர்: "கோடங்கல் தொகுதி எல்லை எங்கு தொடங்கி எங்கு முடிகிறது என்றே தெரியாமல் தான் பிரச்சாரங்களை மேற்கொண்டேன். முதல்முறையாக அப்போதுதான் கோடங்கல் சட்டசபை தொகுதிக்கு சென்றேன். 14 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்து 7,500 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்." என இந்த வெற்றி குறித்துப் பேசியுள்ளார் ரேவந்த் ரெட்டி.
அதன்பின்னர், 2014-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் ரேவந்த் ரெட்டி வெற்றி பெற்றார். 2014-ஆம் ஆண்டு தெலுங்கானா சட்டமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திர மாநிலம் பிரிந்த நிலையில், தெலுங்கானா மாநில தெலுங்கு தேச கட்சியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார் ரேவந்த் ரெட்டி.
ரேவந்த் ரெட்டி கைது: 2015ஆம் ஆண்டு தெலங்கானா சட்டப்பேரவை மேல்சபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க நியமன எம்எல்ஏ எல்விஸ் ஸ்டீபன்சனுக்கு ரேவந்த் ரெட்டி லஞ்சம் கொடுத்ததாக ஒரு 'ஸ்டிங்-ஆபரேஷன்' வீடியோ வெளியிடப்பட்டது.
இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து 2015 மே மாத இறுதியில் ரேவந்த் ரெட்டியை ஊழல் தடுப்புப் பிரிவு கைது செய்தது. அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தெலுங்கானா உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து ரேவந்த் ரெட்டி ஜூலை மாதம் விடுவிக்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்: பின்னர், 2017-ல் தெலுங்கு தேசம் கட்சியை விட்டு விலகி, ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2018-ல் காங்கிரஸ் கட்சியின் தெலங்கானா மாநில செயல் தலைவரானார். 2018-ல் தெலுங்கானாவில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கோடங்கல் தொகுதியில் நின்று தோல்வியைச் சந்தித்தார்.
2019-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவர், தெலங்கானா மாநிலம், மல்காஜ்கிரி தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். தெலுங்கானா மாநிலத்தில், ரேவந்த் ரெட்டிக்கென மக்கள் மத்தியில் ஒரு ஆதரவு அலை உருவானது. இதைத் தொடர்ந்து இவரின் வளர்ச்சியை கண்டு, 2021ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைவராக கட்சி மேலிடம் நியமித்தது.
மிகப்பெரிய பொறுப்பு: கோஷ்டி மோதல்களுக்கு பெயர் போன தெலுங்கானா காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் பொறுப்பை ஏற்ற ரேவந்த் ரெட்டி, மூத்த தலைவர்களைச் சமாளித்து, கட்சியை திறம்பட நடத்திச் சென்றார். இதன் மூலம், மேலிடத்தின் நம்பிக்கையைப் பெற்றார். ராகுல் காந்திக்கும் நெருக்கமானார். கேசிஆர் மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையாக எதிர்க்கும் தலைவராக ரேவந்த் ரெட்டி காங்கிரஸ் தொண்டர்களின் அபிமானத்தைப் பெற்றார்.
சாரதியாக நின்று: இதைத்தொடர்ந்து, நடைபெற்று முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சாரதியாக நின்று வழிநடத்தினார். தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில், கோடங்கல் மற்றும் காமாரெட்டி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார் ரேவந்த் ரெட்டி. கோடங்கல் தொகுதியில் வெற்றி பெற்ற நிலையிலும், காமாரெட்டியில் கேசிஆருக்கு டஃப் ஃபைட் கொடுத்த ரேவந்த் ரெட்டி பாஜக வேட்பாளர் கட்டிப்பள்ளி வெங்கட ரமண ரெட்டியிடம் தோல்வியைத் தழுவினார்.
இந்நிலையில், இன்று தெலங்கானா மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ளார். ரேவந்த் ரெட்டி. இவருக்கு கீதா என்கிற மனைவியும் நைமிஷா எனும் மகளும் உள்ளனர். ரேவந்த் ரெட்டியின் மனைவி கீதா, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த ஜெய்பால் ரெட்டியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications