விபரீதம்! 48 மணி நேரத்தில் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை! 9 பேர் பலி, இருவர் கவலைக்கிடம்! என்னாச்சு
ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் பல மாணவர்கள் வரிசையாகத் தற்கொலையால் உயிரிழந்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது.
நமது நாட்டில் தேர்வுக்கு மிகவும் அதீத முக்கியத்துவம் அளிப்பார்கள். தேர்வில் ஒரு மாணவர் எத்தனை மார்க் எடுக்கிறாரோ.. அதைப் பொறுத்தே அவருக்குக் கல்லூரிகள் கிடைக்கும் என்பதால் பெற்றோர் அதிக எதிர்பார்ப்பை வைத்திருப்பார்கள்.

இதன் காரணமாகத் தேர்வு காலங்களில் மாணவர்கள் மீது அதிக அழுத்தம் ஏற்படும்.. பல மாணவர்கள் எங்குப் பெற்றோரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியாதோ என்று அஞ்சியே விபரீதமான முடிவுகளை எடுக்கிறார்கள்.
ஆந்திரா: அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் இப்போது ஆந்திரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.. ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த புதன்கிழமைதான் 11 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியாகி வெறும் 48 மணி நேரத்தில் அடுத்தடுத்து 9 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட ஷாக் சம்பவம் நடந்துள்ளது. இது தவிர மேலும் இரு மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
ஆந்திராவில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். அதில் 11ஆம் வகுப்பில் 61 சதவீத தேர்ச்சியும், 12ம் வகுப்பில் 72 சதவீதமும் தேர்ச்சியும் இருந்துள்ளது. இதற்கிடையே தேர்வு முடிவுகள் வெளியான பிறகு ஆந்திராவில் பல மாணவர்கள் போதிய மார்க் எடுக்கவில்லை என்று தற்கொலை செய்து கொண்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.
மாணவர்கள்: ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பி தருண் என்ற 17 வயது மாணவர் தேர்வு முடிவு வெளியானதும் ரயில் முன் பாய்ந்துள்ளார். கோபாலபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த +1 மாணவரான இவர், ஒரு சில தேர்வுகளில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து விபரீத முடிவை எடுத்துள்ளார். விசாகப்பட்டினம் மல்காபுரம் அடுத்துள்ள திரிநாதபுரத்தில் உள்ள 16 வயது சிறுமியும் சில பாடங்களில் தோல்வியடைந்ததால் எடுக்கக் கூடாத முடிவை எடுத்துள்ளார்.
அதே விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மற்றொரு 18 வயது இளைஞர் +2 தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர்கள் இருவர் தேர்வில் தோல்வியடைந்ததால் உயிரை மாய்த்துக் கொண்டனர். அனகாபள்ளியில் உள்ள 17 வயது மாணவர் +1 தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மன உளைச்சல் மோசமான முடிவை எடுத்துள்ளார்.
மிக பெரிய பிரச்சினை: இந்தியாவின் டாப் கல்லூரிகளில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) பல்வேறு வளாகங்களில் இந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் வகையில் நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மார்க் முக்கியம் தான் என்றாலும் போதிய அளவில் மார்க் எடுக்கவில்லை என்றாலோ அல்லது தேர்வில் தோல்வி அடைந்தாலோ அத்துடன் வாழ்க்கை முடிந்து போனதாக அர்த்தம் இல்லை. நம்மை சுற்றி வெற்றிகரமாக இருக்கும் பலரும் தங்கள் பள்ளி கல்லூரி தேர்வுகளில் கம்மி மார்க் எடுத்தவர்கள்தான். எனவே, மார்க் குறைந்ததால் யாரும் விபரீத முடிவை எடுக்கக் கூடாது என்பதே வல்லுநர்களின் அட்வைஸாக உள்ளது.
தலைமை நீதிபதி கவலை: இந்தியாவில் மாணவர்கள் தற்கொலை என்பது மிகப் பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. சில மாதங்களில் மட்டும் ஐஐடிகளில் பல மாணவர்கள் இதுபோல செய்து கொண்டுள்ளனர். இது குறித்து இந்தியத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூட கவலை தெரிவித்திருந்தார்.
மாணவர்கள் தற்கொலைக்குக் கவலை தெரிவித்த அவர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை நினைத்தால் இதயமே கனப்பதாகத் தெரிவித்தார். மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவதைப் பார்க்கும் போது, நமது கல்வி அமைப்புகள் தவறான நிலைக்கு அழைத்துச் செல்கிறதோ என்று தோன்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தீர்வு இல்லை: எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை செய்து கொள்வது தீர்வு இல்லை. தற்கொலை தொடர்பான எண்ணங்கள் எழுந்தால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்
மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.












Click it and Unblock the Notifications