"மகளிர் இலவசம்" எதிரொலி.. தெலுங்கானாவில் ஆண்கள் ஒன்லி பஸ்கள்! ஆனால் 2 நாளில் மூடுவிழா! ஏன் தெரியுமா
ஹைதராபாத்: மகளிர் இலவச பயணித்தால் ஆண் பயணிகள் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க ஹைதராபாத்தில் ஆண்கள் ஒன்லி சிறப்புப் பேருந்து தொடங்கப்பட்ட நிலையில், சில நாட்களில் அது மூடுவிழாவைச் சந்தித்துள்ளது. அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
நமது தமிழகத்தைப் போலவே அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் மகளிருக்குப் பேருந்து பயணம் இலவசம் என்று காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரம் சமயத்திலேயே அறிவித்தது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தேர்தலில் பெண்கள் வாக்குகளைப் பெறவும் காங்கிரஸ் கட்சிக்கு அது மிகப் பெரியளவில் உதவியது.

இதற்கிடையே ரேவந்த் ரெட்டி முதல்வராகப் பொறுப்பேற்ற உடன் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. மகா லக்ஷ்மி என்ற இத்திட்டத்தின் கீழ் பெண்கள் அனைவரும் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம். இதற்குத் தெலுங்கானாவில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து.
மகளிர்: இருப்பினும், இதனால் தெலுங்கானாவில் மற்றொரு வினோதமான பிரச்சினை ஏற்பட்டது. அதாவது இலவச பேருந்து பயணத்தால் அங்கு பஸ்ஸில் செல்லும் பெண்கள் எண்ணிக்கை 20% வரை அதிகரித்துள்ளது. முன்பு பேருந்துகளில் 52%ஆக இருந்த மகளிர் எண்ணிக்கை இப்போது 80%ஆக அதிகரித்துள்ளதாம். இதனால் அங்குப் பேருந்துகளில் பயணிக்கும் ஆண்கள் தங்களுக்கு இருக்கைகள் கிடைப்பதில்லை எனப் புலம்புகிறார்கள்.
இதற்காக பல்வேறு தீர்வுகளை அம்மாநில போக்குவரத்துக் கழகம் முயல்கிறது. இதற்கிடையே தெலுங்கானா மாநில போக்குவரத்துக் கழகம் கடந்த பிப். 1ஆம் தேதி ஆண்கள் மட்டுமே பயணிக்கும் சிறப்புப் பேருந்தை அறிமுகம் செய்தது. இப்ராஹிம்பட்டினம்- எல்.பி நகர் ரூட்டில் இந்த ஆண்கள் ஒன்லி சிறப்புப் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரூட்டில் மாணவர்கள் பலரும் பயணிக்கும் நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில் இந்த ஆண்கள் பேருந்து ஆரம்பிக்கப்பட்டது.
ஆண்கள் ஒன்லி பேருந்து: பல்வேறு பெரிய பொறியியல் நிறுவனங்களை உள்ளடக்கிய இந்த வழித்தடத்தில் ஆண்களுக்கென தனியாக ஒரு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதாகத் தெலுங்கானா போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மகளிருக்கு இலவசம் என்ற அறிவிப்பால் ஆண்கள் குறிப்பாக மாணவர்கள் பெரும் சிரமப்படுவதாக வந்த புகார்களால் இந்த பேருந்து சேவை தொடங்கப்பட்டது. காலை மற்றும் மாலை என பீக் ஹவர்களில் பேருந்துகளை இயக்க திட்டமிட்டிருந்தனர்.
இருப்பினும், முதல் 2, 3 நாட்களிலேயே இதற்கு போதிய வரவேற்பு இல்லை. ஏனென்றால் மாணவர்கள் உட்பட அனைத்து ஆண்களும் எந்த பேருந்து முதலில் வருகிறதோ அதில் ஏறிவிடுகிறார்களாம்.. அவர்கள் சிறப்புப் பேருந்துக்கு எல்லாம் காத்திருப்பதில்லை... இதனால் ஆண்கள் ஒன்லி பேருந்தில் போதிய பயணிகள் ஏறுவதில்லையாம்.
மூடுவிழா: இதனால் ஆரம்பித்த சில நாட்களிலேயே இந்த ஆண்கள் ஒன்லி பேருந்து சேவை மூடுவிழாவைச் சந்தித்துள்ளது. ஆண்கள் மட்டும் பயணிக்கும் சிறப்புப் பேருந்துகளை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாகக் கூடுதல் பேருந்துகளை இயக்குவதே சரியான தீர்வாக இருக்கும் என்று பலரும் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆண்களுக்கு சீட் கிடைப்பதில்லை என்ற புகாருக்குத் தீர்வு காணும் வகையில், பெண்களுக்குத் தனியாக இருக்கை ஒதுக்கப்பட்டதை போலவே ஆண்களுக்கும் தனியாக சீட்களை ஒதுக்கவும் தெலுங்கானா போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ஆண்கள் சிறப்பு பஸ் வரவேற்பு கிடைக்காத நிலையில், தனி இருக்கைகள் பிரச்சினையைச் சரி செய்யும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications