தெலுங்கானாவில் எகிறி அடிக்கும் காங்கிரஸ்.. ஆட்சியை இழக்கும் கேசிஆர்.. பாஜக எங்கே? புது சர்வே
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கே யார் வெல்வார்கள் என்பது குறித்த பரபர சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
இந்தாண்டு இறுதியில் தெலுங்கானா, மபி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் நமது அண்டை மாநிலமான தெலுங்கானாவில் தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அங்கே இப்போது ஆளும் கட்சியாக உள்ள பிஆர்எஸ் தேசியளவில் என்டிஏ மற்றும் "இந்தியா" என எந்தவொரு கூட்டணியிலும் இல்லை. அதேநேரம் மறுபுறம் அங்கே காங்கிரஸ் கம்பேக் தர முயன்று வருகிறது.
தெலுங்கானா: ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்த போது காங்கிரஸ் இங்கே ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால், ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிந்த போது, இரு மாநிலங்களிலும் காங்கிரஸால் வெல்ல முடியவில்லை. தெலுங்கானாவைப் பொறுத்தவரை மாநிலம் உருவானது முதலே கடந்த 9 ஆண்டுகளாக அங்கே கேசிஆர் முதல்வராக உள்ளார். அவரது பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இதற்கிடையே சில மாதங்களாக அங்கே அரசியல் களம் மாற தொடங்கியுள்ளது.
இதற்கிடையே தெலுங்கானாவில் விட்ட இடத்தை பிடிக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக தெலுங்கானாவில் காங்கிரஸ் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தெலுங்கானா மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார்.
ட்விஸ்ட்: கடந்த மாதம் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு அதில் 6 முக்கிய வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டது. கர்நாடகாவைப் போலவே இலவச பேருந்து பயணம், மகளிருக்கு மாதாமாதம் உதவித் தொகைகள் அறிவிக்கப்பட்டது. இது காங்கிரஸ் வாக்கு வங்கியைத் தெலுங்கானாவில் நிச்சயம் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.
இதற்கிடையே தெலுங்கானா சட்டசபைத் தேர்தல் குறித்து ஜன்மத் என்ற அமைப்பு நடத்திய புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே மொத்தம் 119 இடங்கள் இருக்கிறது. அங்கு எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்க 60 இடங்கள் தேவை. இதற்கிடையே இந்த 60 என்ற மேஜிக் எண்ணைத் தொடக் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்புள்ளதாக ஜன்மத் அமைப்பு நடத்திய புதிய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
வெல்வது யார்: இந்தத் தேர்தலில் ஆட்சியில் இருக்கும் பிஆர்எஸ் தோல்வியடையும் எனக் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 58-60 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு வெறும் 43-45 இடங்கள் மட்டுமே கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. பாஜகவுக்கு இதில் 8-9 இடங்களும், ஓவைசியின் மஜ்லீஸ் கட்சிக்கு 6-7 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதர கட்சிகள் 2-3 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2018இல் தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்டது. காங்கிரஸ் 94 இடங்களில் போட்டியிட்டது.. தெலுங்கு தேசம் கட்சிக்கு 14 இடங்கள், டிஜேஎஸ் கட்சிக்கு 8 இடங்கள், சிபிஐ 3 இடங்கள் ஒதுக்கப்பட்டன. மறுபுறம் பிஆர்எஸ் 119 இடங்களிலும், பாஜக 118 இடங்களிலும் போட்டியிட்டன. இந்த முறை காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுமா அல்லது கூட்டணி அமைக்குமா என்பது வரும் காலத்தில் தெரிந்துவிடும்.
ஏன் முக்கியம்: இந்த ஜன்மத் அமைப்பு இந்தாண்டு நடந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 41% வாக்குகளை வாங்கும் என்றும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என்று கூறியிருந்தது. கர்நாடக தேர்தல் முடிவுகளில் அதுவே எதிரொலித்தது. மேலும், பாஜக, ஜேடிஎஸ் கட்சிகளின் வாக்கு சதவிகிதமும் கிட்டத்தட்ட இவர்கள் கணித்தது போலவே இருந்தது. இதனால் இந்த சர்வே முடிவுகள் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications