காஷ்மீரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் : சி.ஆர்.பி.எப். அதிகாரி பலி - 7 பேர் படுகாயம்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் பலியானார். மேலும் 3 அதிகாரிகள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் சட்டசபைத் தேர்தல் 5 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில், 2 கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே நடந்து முடிந்துள்ள நிலையில், 3ம் கட்ட தேர்தல் வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 3ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள புல்வாமா மாவட்டத்தில் போகு என்ற கிராமத்தில் நேற்று மாலை மத்திய ரிசர்வ் படை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள், போலீசாரை நோக்கி கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பலியானார். மேலும், 4 போலீஸ்காரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 7 பேர் பலத்த காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பிச் சென்று விட்டதாகவும், அவர்களைத் தொடர்ந்து தேடி வருவதாகவும் அம்மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.