தெலுங்கானாவில் பேருந்து மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: குழந்தை உள்பட 10 பேர் பலி
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் அரசு பேருந்து மீது லாரி மோதியதில் 5 பெண்கள், ஒரு ஆண் குழந்தை உள்பட 10 பேர் பலியாகியுள்ளனர், 16 பேர் காயம் அடைந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள ராமண்ணாபேட்டையில் 45 பேருடன் சென்ற அரசுப் பேருந்து மீது லாரி ஒன்று பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரி டிரைவர், பேருந்தில் இருந்த 9 பேர் பலியாகியுள்ளனர்.

இது குறித்து கூடுதல் எஸ்.பி. கங்கா ராம் கூறுகையில்,
அரசுப் பேருந்து மீது லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் பேருந்தில் இருந்த 9 பேர், லாரி டிரைவர் ஆகியோர் பலியாகியுள்ளனர். 16 பேர் காயம் அடைந்துள்ளனர். அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பலியானவர்களில் 5 பெண்கள், ஒரு ஆண் குழந்தையும் அடக்கம். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது லாரி டிரைவரின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்து. இந்த விபத்தில் பேருந்தின் வலப்பக்கம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது என்றார்.

விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் அளிக்கப்படும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications