ராஜஸ்தானில் பஸ் மீது டிராக்டர் மோதி விபத்து - 10 பக்தர்கள் பலி, 36 பேர் காயம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பக்தர்கள் சென்ற பஸ் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 10 பேர் பரிதாபமாகப் பலியானார்கள், 36 பேர் காயமடைந்தார்கள்.
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றி சென்ற பஸ் மீது டிராக்டர் மோதியதில் 10 பக்தர்கள் பலியாகினர்.
ராஜஸ்தான் மாநிலம் போக்ரான் அருகே உள்ள பாபா ராம்தேவ் சன்னதிக்கு, உதைபூரை சேர்ந்த பக்தர்கள் பஸ்சில் வந்தனர். சாமி தரிசனம் முடித்துவிட்டு, தங்களது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இன்று காலை 6 மணியளவில் பாலி- உதைபூர் சாலையில் மணிடா கிராமத்தை கடந்த போது, அப்பேருந்து மீது எதிரே வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 6 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் காயம் அடைந்த 40 பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது வழியிலேயே மேலும் 4 பக்தர்கள் உயிரிழந்தனர். மீதமிருந்த 36 பக்தர்கள் அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்துத் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த டிராக்டரின் ஓட்டுநர் தப்பி ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications