உ.பி., மருத்துவமனையில் லஞ்ச வெறிக்கு பலியான பிஞ்சு குழந்தை!!
பாக்ரைச்: உத்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் 10-வயது குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. மருத்துமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்டு சிகிச்சை அளிக்க தாமதப் படுத்தியதாலேயே குழந்தை உயிரிழந்ததாக குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் பாக்ரைச் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஷிவ் தத்-சுமிதா இவர்களின் 10 மாத குழந்தை கிருஷ்ணா. குழந்தைக்கு அதிகமாக காய்ச்சல் அடித்ததால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டது.
இது குறித்து குழந்தையின் தாய் சுமிதா கூறியதாவது: குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து மருத்துவரிடம் கொண்டு சென்றோம். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர், குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு கூறினார். இதனிடையே, குழந்தையை மருத்துவமனை வார்ட்டில் சேர்க்க அங்கிருந்த நர்ஸ் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சுத்தம் செய்யும் பெண் வரை லஞ்சம் கேட்டனர் என்று கூறினார்.
குழந்தையில் தந்தை ஷிவ் கூறியதாவது: மருத்துவமனையில் குழந்தைக்கு படுக்கை ஒதுக்குவதற்கு அங்கிருந்த நர்ஸ் லஞ்சம் கேட்டார். இதை நாங்கள் கொடுக்க மறுத்ததால் அவர் எங்களுடன் தகராறில் ஈடுபட்டார். இதனால், எங்களது குழந்தைகளுக்கு மிக நீண்ட நேரம் கழித்து தான் ஊசி போட்டனர். அதனால் எந்த பயனும் இல்லாமல் எனது குழந்தை உயிரிழந்துவிட்டது என்று கூறினார்.
இது குறித்து மருத்துவமனை அதிகாரி கூறியதாவது: இந்த சம்பவம் துரதிஷ்டவசமாக நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ரூ.30 லஞ்சம் வாங்கி கொண்டு படுக்கை ஒதுக்கிய சுகாதார பணியாளர் பணியில் இருந்து நிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் வார்டில் பணியாற்றிய நர்ஸ் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று கூறினார்.