ம.பியில் பள்ளிக்கு செல்லாத 10 வயது சிறுவனை மரத்தில் தலைகீழாக கட்டி வைத்து அடித்த மாமா!
போபால்: மத்தியப்பிரதேசம் மாநிலம் ராய்சன் மாவட்டத்தில் 10 வயது சிறுவனை மரத்தில் தலைகீழாக கட்டி தொங்க விட்டு மாமா முறை உறவினரே அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் வீடியோக் காட்சி செய்திச் சேனல்களில் வெளியாகி உள்ளன. கீழே இறக்கிவிடும்படி அந்த சிறுவன் கதறி அழுவதும், அதைப் பொருட்படுத்தாமல் அந்த நபர் சிறுவனை பிரம்பால் அடிப்பதும் அந்த வீடியோ காட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் மத்தியில் இந்த அவலம் நடந்துள்ளது.
வேடிக்கை பார்க்கும் மக்கள் இதனை தட்டிக்கேட்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை மீட்டு பிரதேஷ் யாதவ் என்ற அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளிக்கு ஒழுங்காக செல்ல வேண்டும் என்பதற்காக இத்தகைய செயலில் ஈடுபட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.