புயலுக்கு நடுவே மாயமான 102 மீனவர்களின் நிலை என்ன? உறவினர்கள் கலக்கம்.. தேடும் பணி தீவிரம்
ஓகி புயலின் போது கேரள கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.
திருவனந்தபுரம்: ஓகி புயலின்போது கேரள கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் இன்னும் கரை திரும்ப வில்லை. அவர்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் உருவான ஓகி புயல் கடந்த 2 தினங்களுக்கு தென் தமிழகத்தை ஒரு புரட்டு புரட்டி விட்டது. இதனால் கடந்த இரு நாள்களுக்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக அதிக கனமழை பெய்தது.
கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது. இதனால் மக்கள் வெளியேற முடியாதபடி தத்தளித்தனர். ஓகி புயலின்போது கேரள கடற்பகுதியில் மீன்பிடிக்க சென்ற 102 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. அவர்கள் காணவில்லை என்று சொல்லமுடியாது என்று திருவனந்தபுரம் ஆட்சியர் தெரிவித்தார்.
மீனவர்களை மீட்க இந்திய கடற்படை, விமான படை மற்றும் கடலோர காவல் படை ஆகியன தேடும் பணிகளை தொடங்கின. இந்நிலையில் இந்த புயல் லட்சத்தீவு அருகே நகர்ந்து விட்டது.
எனினும் இந்த புயல் வலுவிழந்ததற்கான அறிகுறிகள் இல்லாததால் அடுத்த 24 மணிநேரத்தில் இது வலுபெறும் என்று தெரிகிறது. இதனால் தமிழகம், கேரளம், லட்சத்தீவு ஆகியவைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.