நிதானமாக வயர், ஸ்டூல் வாங்கி வந்து தூக்குப் போட்ட 11 பேர்: காட்டிக் கொடுத்த சிசிடிவி
Recommended Video
டெல்லி: டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் இறந்த விவகாரத்தில் வெளியாட்கள் யாருக்கும் தொடர்பு இல்லை என்பது சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
டெல்லியில் 77 வயது நாராயண் தேவி மற்றும் அவரது குடும்பத்தார் 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களின் கண்கள் துணியால் கட்டப்பட்டு, கைகளும் பின் புறமாக கட்டப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சிசிடிவி பதிவுகள் மூலம் வெளியாட்கள் யாரும் வீட்டிற்குள் செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
குடும்பம்
சிசிடிவி பதிவுகளில் நாராயண் தேவி குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண், 12 வயது த்ருவ், 15 வயது ஷிவம் ஆகியோர் பர்னிச்சர் கடைக்கு சென்று வயர்கள், ஸ்டூல்கள் வாங்கி வந்தது தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரும் திட்டமிட்டு தான் இந்த செயலை செய்துள்ளனர்.
தற்கொலை
அனைவரும் இரவு 1 மணி அளவில் இறந்துள்ளனர். நாராயண் தேவியின் இளைய மகன் லலித் சுந்தாவத்(45) உத்தரவுகள் பிறப்பிக்க அதை குடும்பத்தார் பின்பற்றியது சிசிடிவி பதிவில் தெரிய வந்துள்ளது.
டைரி
முக்தி அடைவது குறித்து இறந்து போன தனது தந்தை கூறியதாக லலித் தனது டைரியில் எழுதி வைத்துள்ளார். தூக்கில் தொங்கினால் தங்களை லலித்தின் தந்தையின் ஆன்மா வந்து காப்பாற்றும் என்று அவர்கள் நம்பியுள்ளனர்.
நிறம்
11 பேரும் 11 டைரிகளில் குறிப்புகள் எழுதி வைத்தது தெரிய வந்துள்ளது. ஒரு டைரியின் கடைசி வாக்கியத்தில் கூறப்பட்டிருப்பதாவது, ஒரு கப்பில் தண்ணீர் வைக்கவும், அதன் நிறம் மாறியதும் நான் வந்து உங்களை காப்பாற்றுவேன் என்று இருந்தது.
சிறுவர்கள்
5 ஸ்டூல்களை வைத்து அவர்கள் தூக்கு போட்டுள்ளனர். த்ருவ் மற்றும் ஷிவம் ஆகிய சிறுவர்களை அவர்களின் பெற்றோரே கைகளை கட்டி வயரை மாட்டிவிட்டுள்ளனர்.
கட்டு
லலித்தின் மனைவி டினாவின் கைகளும், கண்களும் கட்டப்படவில்லை. அவர் தான் மற்றவர்களின் கைகளை பின்புறமாக கட்டி, கண்களை துணியால் கட்டியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. நாராயண் தேவி மட்டும் தரையில் பிணமாகக் கிடந்தார்.
வீடியோ பதிவு
இரவு 10 மணிக்கு மூத்த மருமகள் ஸ்டூல்களை கொண்டு வந்துள்ளார். இரவு 10.15 மணிக்கு த்ருவ், ஷிவம் ஆகயோர் தூக்குப் போடத் தேவையான வயர்களை கொண்டு வந்துள்ளனர். 10.39 மணிக்கு அந்த குடும்பம் ஆர்டர் செய்த 20 சப்பாதி டோர் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. 10.57 மணிக்கு நாராயண் தேவியின் மூத்த மகன் புவனேஷ் நாயை வெளியே அழைத்துச் சென்றுள்ளார். 11.04 மணிக்கு புவனேஷும், நாயும் வீட்டிற்குள் சென்றுள்ளனர். ஜூலை மாதம் 1ம் தேதி காலை 5.56 மணிக்கு பால் கார்டன்களை வைத்துவிட்டு டிரக் சென்றுள்ளது. 7.14 மணிக்கு அக்கம் பக்கத்தார் வந்து பார்த்தபோது அனைவரும் இறந்து கிடந்தனர். இது தான் சிசிடிவி பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.