மியான்மரில் கொடுமை.. ஒரே நாளில் பெண்கள், குழந்தைகள் உள்பட 114 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம்!
யாங்கூன்:மியான்மர் நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும்114 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மியான்மர் மக்கள் ராணுவ ஆட்சியை துளி கூட ஏற்றுக் கொள்ளவில்லை.இதனை எதிர்த்து போராடும் மக்கள் மீது ராணுவம் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டு வருகிறது.

மியான்மரில் பதற்றம்
மியான்மர் நாட்டில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சி நடந்து வந்தது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி அந்த நாட்டின் ராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் ராணுவம் அதிரடியாக ஆங் சான் சூகி ஆட்சியை கவிழ்த்து தங்கள் வசம் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து ஆங் சான் சூகி, அந்த நாட்டின் அதிபர் வின் மைண்ட் உள்பட 100க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை ராணுவம் தடுப்புக்காவலில் வைத்தது.

உலக நாடுகள் எதிப்பு குரல்
மியான்மர் ராணுவத்தினரின் இந்த செயல் உலக அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்க ராணுவத்துக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மியான்மர் நாட்டின் மீது பொருளாதார தடை விதித்தார். மேலும் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் மியான்மர் ராணுவத்துக்கு எதிராக கண்டன குரல்களை எழுப்பினர்.

மக்கள் கொதித்தெழுந்தனர்
மியான்மர் மக்கள் ராணுவத்தின் செயலை துளி கூட ஏற்றுக் கொள்ளவில்லை. எங்களுக்கு நாங்கள் தேர்ந்தெடுத்த மக்கள் ஆட்சிதான் வேண்டும், அடக்குமுறை கொண்ட ராணுவ ஆட்சி வேண்டாம் என்று கோரி அவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் போராட்டம் ராணுவத்துக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது ராணுவம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. குழந்தைகள், பெண்கள் என பாராமல் சகட்டு மேனிக்கு மக்களை சுட்டுக்கொன்று வருகின்றனர். ராணுவத்தின் மூலம் இதுவரை 320-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ராணுவம் சுட்டுக்கொலை
இந்த நிலையில் மியான்மரின் ஆயுதப்படை தினம் கொண்டாடப்பட்டது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 114 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறுவர்கள், சிறுமிகள் என பலரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். மியான்மரின் மாண்டலே நகரில் 5 இளைஞர்கள் உள்பட 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், யாங்கோன் நகரில் கால்பந்து வீரர் ஒருவர், 2 சிறுமிகள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மக்களைப் பாதுகாப்போம், ஜனநாயகத்திற்காக பாடுப்படுவோம் என்று ராணுவ ஜெனெரல் மின் ஆங் ஹேலிங் கூறிய மறுநாளே இந்த கொடுமையான செயலை ராணுவத்தினர் அரங்கேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. மியான்மர் ராணுவத்தின் இந்த செயலுக்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications