பெங்களூரில் கண்டமேனிக்கு சாலையை கடந்து சென்ற 115 பேர் கைது
பெங்களூர்: பெங்களூரில் ஓசூர் ரோட்டில் போக்குவரத்தை கண்டுகொள்ளாமல் ஜாலியாக நடந்த 115 பேரை மடிவாலா போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூர் எப்பொழுது பார்த்தாலும் போக்குவரத்து நெரிசலாக இருக்கும். இந்நிலையில் நடந்து செல்பவர்கள் வாகனங்கள் வருவதை கண்டுகொள்ளாமல் எனக்கென்னவென்று சாலையை கடந்து செல்வார்கள். வாகன ஓட்டிகள் வேறு வழியில்லாமல் எரிச்சலோடு செல்ல வேண்டும்.
இந்நிலையில் பெங்களூரில் உள்ள ஓசூர் ரோட்டில் பொறுப்பில்லாமல் கண்டபடி நடந்து சென்று சாலையை கடந்த 115 பேரை மடிவாலா போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும் சிலரை நீதிமன்றத்தில் ஆஜராகி அபராதத் தொகையை செலுத்துமாறு போலீசார் கூறியுள்ளனர்.
இது குறித்து போக்குவரத்து துறை கூடுதல் கமிஷனர் சலீம் கூறுகையில்,
நடந்து செல்பவர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டோம். விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களை கண்டுபிடித்து அங்கு பொறுப்பில்லாமல் நடந்து செல்பவர்களை கைது செய்வோம் என்றார்.